பள்ளிகளில் நிலவேம்பு கசாயம்: தனியார் அமைப்புகளுக்கு தடை
பள்ளிகளில் நிலவேம்பு கசாயம்: தனியார் அமைப்புகளுக்கு தடை
UPDATED : டிச 25, 2012 12:00 AM
ADDED : டிச 25, 2012 08:25 AM
பாகனேரி: பள்ளிகளில் மாணவர்களுக்கு, டெங்கு கசாயம், தடுப்பு மாத்திரை வழங்க, தனியார் அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால், தமிழகத்தில் ஏராளமானோர் இறந்துள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதித்து, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த, அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்களில், நிலவேம்பு கசாயம் வழங்க, அரசு உத்தரவிட்டது. இதன்படி, பப்பாளி இலை, நிலவேம்பு, மலைவேம்பு கசாயம், தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
சில தனியார் அமைப்புகளும், பள்ளி, சுகாதார நிலையங்களில் நிலவேம்பு கசாயத்தை வழங்கி வருகின்றனர். இவை தரமற்று இருப்பதாக, அரசுக்கு புகார் சென்றது. மேலும், சுகாதாரத்துறை அனுமதியுடன், டாக்டர்கள் முன்னிலையில் மட்டுமே, பள்ளி மாணவர்களுக்கு, டெங்கு கசாயம் வழங்க வேண்டும். ஆனால், சில அமைப்புகள் தன்னிச்சையாக வழங்குவதாக புகார் வந்தது.
எனவே, சுகாதாரத்துறையினர் இன்றி, கசாயம், தடுப்பு மாத்திரை வழங்க, அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "டெங்கு தடுப்பு கசாயம் குடிக்கும் போது, சில மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். தனியார் அமைப்புகள் தரும் கசாயம், தடுப்பு மாத்திரைகள், தரமானதா என, டாக்டர்கள் பரிசோதித்த பின்னரே வழங்க வேண்டும். சுகாதாரத்துறை அனுமதியின்றி, பள்ளிகளில் வழங்க அனுமதிக்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது,&'&' என்றார்.
