UPDATED : டிச 26, 2012 12:00 AM
ADDED : டிச 27, 2012 03:23 PM
எழுத்து என்பது நிரந்தரப் பதிவு
பணி உலகில், வாய்மொழி தொடர்பு என்பது பிரதானமாக இருந்தாலும், அதைவிட முக்கியமானதாக இருப்பது எழுத்து மூலமான தொடர்புதான். ஏனெனில், வாய்வழி தொடர்பானது மறக்கப்படலாம் மற்றும் அதற்கு எந்த ஆதாரமும் இருக்காது. ஆனால், எழுத்து வழி தொடர்பானது, நீடித்த ஆதாரமாக இருக்கும். எனவே, எழுத்து வழி தகவல் தொடர்பை மேற்கொள்ளும் முன்பாக, மிக மிக கவனமுடன் செயல்பட வேண்டும்.
தகவல்தொடர்பு ஒரு செல்வம்
பணபரிவர்த்தனை தொடர்பான தகவல் தொடர்பில், தெளிவு என்பது மிக மிக முக்கியம். ஏனெனில், பணம் சம்பந்தப்பட்டது இது. வர்த்தக தகவல்தொடர்பு என்பது, தகவல்தொடர்பின் கொள்கைகளையே பின்பற்றுகிறது. அவை,
நளினம், இசைய செய்தல் மற்றும் பரஸ்பர நன்மை.
அதேசமயம், சம்பிரதாயம் மற்றும் நடைமுறை ஆகிய விஷயங்களில், இந்த இரு தகவல்தொடர்புகளுக்கு இடையே, வேறுபாடுகள் நிலவுகின்றன.
சிறந்த தகவல் தொடர்புக்கான எழுத்து முறை பற்றிய சிறிய அலசல்
* தொழில் முறையில் இருக்க வேண்டும். அதற்காக, ஒரேடியான அலங்காரம் இருக்கக்கூடாது.
* தேவையான வார்த்தைகளை மட்டுமே எழுதி, சுருக்கமாக இருத்தல் தகவல்தொடர்பில் ஒரு கலை.
* தேவையற்ற அலங்கார நடையை பயன்படுத்தாமல் இருப்பது.
* பெயர்கள், தலைப்புகள் மற்றும் பாலினம் ஆகிய அம்சங்களை குறிப்பிடுகையில், அதற்கு சிறப்பு கவனம் தரப்பட்டிருக்க வேண்டும்.
* சொல்ல வந்ததை தெளிவாக சொல்ல வேண்டும். படிப்பவர் யூகித்து புரிந்து கொள்வார் என்ற நிலையில், எதையும் எழுதக்கூடாது. அவ்வாறு செய்தால், உங்களின் நோக்கம் நிறைவேறாமல் போகலாம். எதிர்தரப்பில் இருப்பவர், உங்களின் எழுத்தை யூகித்து புரிந்துகொள்ளும் அளவிற்கு, உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் அல்ல என்பதை மறத்தலாகாது.
* ஒன்று அல்லது இரண்டு சாத்தியங்களை மட்டுமே வழங்க வேண்டும். உதாரணமாக, சந்திப்பு எப்போது என்ற கேள்வி வருகையில், இரண்டில், ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வகையில் மட்டுமே அமைக்க வேண்டும். நிறைய வாய்ப்புகளை வழங்கி, காலத்தை வீணடிக்க கூடாது.
* நீங்கள் எழுதும் கடிதம், அனுப்பும் மின்னஞ்சல் போன்றவற்றை, முறையாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சேமிப்பு நடவடிக்கைதான் அனைத்திற்கும் அத்தாட்சி.
* ஒரு விஷயத்தை தயார் செய்து, அதை உரியவருக்கு அனுப்பும் முன்பாக, அது பிழையின்றி இருக்கிறதா, சுருக்கமாக இருக்கிறதா, உங்களின் கருத்து தெளிவாக சொல்லப்பட்டுள்ளதா என்று முழுமையான பரிசோதித்து, அதன்பிறகே, அதை அனுப்ப வேண்டும்.
தகவல் தொடர்பு என்பது நோக்கத்திற்கானது என்ற நடைமுறை ஒருபுறம் இருந்தாலும், ஒரு தனிமனிதரின் ஆளுமை மற்றும் சமூக மதிப்பை அவரின் தகவல்தொடர்பு திறன் நிர்ணயிக்கிறது. எனவே, தகவல்தொடர்பு குறித்த உங்களின் அனைத்துவித திறன்களையும் மேம்படுத்திக்கொள்ள தயங்க வேண்டாம்.
