UPDATED : டிச 27, 2012 12:00 AM
ADDED : டிச 27, 2012 10:50 AM
ஜெய்ப்பூர்: அனுபவம் வாய்ந்தவர்களால் கூட, எளிதில் ஏற முடியாத, முழுவதும் பனி சூழ்ந்த, எவரெஸ்ட் சிகரம் மீது ஏற, 19 வயது, டில்லி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர், சாச்சி சோனி. டில்லி பல்கலைக்கழகத்தில், ஊடகவியல் படித்து வருகிறார். மலையேற்றத்தில் விருப்பம் கொண்ட சாச்சி, 7 வயது முதல், உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி வருகிறார். இமய மலையில் உள்ள பெரும்பாலான சிகரங்களை, இந்த வயதிற்குள் ஏறியுள்ள இந்த மாணவி, உலகின் மிக உயர்ந்த சிகரமாகக் கருதப்படும், நேபாள நாட்டில் உள்ள, எவரெஸ்ட் சிகரம் மீது ஏற விரும்பினார்.
இதற்காக விண்ணப்பித்து, நேபாள அரசு மற்றும் பனி மலை ஏற்றத்திற்கு அனுமதி அளிக்கும் அமைப்பிடம் ஒப்புதல் பெற்றுள்ள சாச்சி, அடுத்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதங்களில், எவரெஸ்ட் மீது ஏற உள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "மலையேற்றத்தில் அதிக விருப்பம் கொண்ட நான், எவரெஸ்ட் சிகரம் மீது ஏறுவதே இலக்காகக் கொண்டிருந்தேன்; அனுமதி கிடைத்துள்ளது. வெற்றிகரமாக என் சாதனையை நிறைவு செய்வேன்; நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்,&'&' என்றார்.
