UPDATED : டிச 29, 2012 12:00 AM
ADDED : டிச 29, 2012 07:03 AM
மோகனூர்: கிளை நூலகம் அமைந்துள்ள பகுதியில், கோழிக் கழிவுகளை கொட்டி வருவதால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
மோகனூர்-ப.வேலூர் சாலை, வாரச்சந்தை அருகே கிளை நூலகம் அமைந்துள்ளது. இங்கு, பல்வேறு தலைப்புகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என தினமும், 100க்கும் மேற்பட்டவர்கள், இங்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும், 2,000க்கும் அதிகமானோர், இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அதேபோல், போட்டி தேர்வுக்கு தேவையான பொது அறிவு நூல்களும் அதிக அளவில் உள்ளதால், போட்டித்தேர்வில் பங்கேற்கும் கல்லூரி மாணவ, மாணவியர், தங்களை தயார் செய்வதற்காக, இங்கு வந்து, பொது அறிவு நூல்களை வாசித்து விட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நூலகத்துக்கு அருகில், அப்பகுதியில் உள்ள கறிக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கோழிக்கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். அதனால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு அபாயமும் உள்ளது. நூலகத்துக்கு படிக்க வரும் பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர், நாள் முழுவதும் மூக்கை பிடித்துக்கொண்டு படித்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
துர்நாற்றத்தை தாங்க முடியாமல், பலரும் நூலகத்துக்கு வருவதை நிறுத்தி விட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு பலமுறை புகார் செய்யப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனமாக இருந்து வருகின்றனர். அதனால், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, பல்வேறு தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டும், சுகாதார சீர்கேட்டை தடுக்கவும், கோழிகளை கழிவுகளை கொட்டுவோர் மீது சம்பந்தப்பட்ட டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
