"உயர்கல்வி துறையில் வளர்ச்சி பெற மாற்றங்கள் அவசியம்"
"உயர்கல்வி துறையில் வளர்ச்சி பெற மாற்றங்கள் அவசியம்"
UPDATED : டிச 29, 2012 12:00 AM
ADDED : டிச 29, 2012 07:59 AM
சென்னை, காட்டாங்கொளத்தூர், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில், எட்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 39 ஆய்வு மாணவர்கள் உட்பட, 8,812 பேருக்கு, பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், குறைவான வசதிகளைப் பயன்படுத்தி, கடுமையான போட்டிகளுக்கிடையில், உலகத் தரம் வாய்ந்த கல்வியைத் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உயர் கல்வியில் தரமானக் கல்வியை அளிப்பதில், தனியார் துறையின் பங்கும் முக்கியமானது.
வெளிநாடுகளில் உயர்கல்வித் துறையில், தனியார் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான, ஹார்வேர்டு, யேல், ஸ்டான்போர்டு போன்றவை, தனியாரின் முயற்சியால் சிறந்து விளங்குகின்றன. ஆனால், இந்தியாவில் தனியார் பல்கலைக்கழங்கள், அந்த அளவிற்கு உயர முடியாததற்கான காரணம் தெரியவில்லை.
பல்கலைக்கழகங்கள், லாப நோக்கில் இல்லாமல், தரமானக் கல்வியை மட்டும் மாணவர்களுக்கு அளிக்கிறோம் என்ற உணர்வை, பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். தற்போது உயர்கல்வி வழங்கும் நடைமுறையை, கல்வி தரத்தை குறைக்காமல், மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம், அதிக அளவில் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.
உயர்கல்வித் துறையில் விரிவான, சிறந்த கல்வி முறையை புகுத்த வேண்டும். இதில் வெளிப் படையான நடைமுறை கொண்டு வரப்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி போதிக்க, தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு, அவ்வப்போது பயிற்சி அளிக்க வேண்டும். தரமான ஆசிரியர்களால் மட்டுமே, தரமான கல்வியை வழங்க முடியும். சமுதாய வளர்ச்சிக்கு கல்வி அவசியம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
