பல்நோக்கு மருத்துவ கல்லூரிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
பல்நோக்கு மருத்துவ கல்லூரிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
UPDATED : நவ 14, 2013 12:00 AM
ADDED : நவ 14, 2013 09:41 AM
சென்னை: சென்னை-வாலாஜா சாலையில், பல்நோக்கு மருத்துவக் கல்லூரி அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுமான பணி மீண்டும் துவங்க உள்ளது.
கடந்த ஆட்சியில், சென்னை, வாலஜா சாலையில் புதிய தலைமை செயலகமும், அதன் அருகில் அரசு செயலர்களுக்கான கட்டடமும் அமைக்கப்பட்டது. செயலர்கள் கட்டடம் அமைக்க 279 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. புதிய தலைமை செயலகம் கட்டி முடிக்கப்பட்ட பின் அரசு செயலர்கள் கட்டட கட்டுமான பணி முடியாமல் இருந்தது. அதற்குள், ஆட்சி மாறியதால், புதிய தலைமை செயலகம், பல்நோக்கு மருத்துவமனையாகவும், அரசு செயலர்களுக்கான கட்டடம், பல்நோக்கு மருத்துவக் கல்லூரியாகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டது.
மருத்துவக் கல்லூரி அமைக்க, மூன்று மாதங்களுக்கு முன், 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இக்கட்டதத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இரண்டு மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தது. இருப்பினும் மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்காததால், கட்டுமான பணிகள் துவங்காமல் இருந்தது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களில், பல்நோக்கு மருத்துவக் கல்லூரி கட்டட கட்டுமான பணி துவங்கும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
