UPDATED : நவ 14, 2013 12:00 AM
ADDED : நவ 14, 2013 10:15 AM
மதுரை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனித்தேர்வுகள் எழுதுவோர்
விண்ணப்பிப்பதற்கு மதுரை மாவட்டத்தில் 3 "நோடல்" மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த தேர்வின்போது தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்தனர். அதில் பல தவறுகள் இருந்தன. மேலும், புகைப்படம் எடுத்தல், விண்ணப்பம் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்தல், பதிவுச் சீட்டு மூலம் மாவட்ட கல்வி அலுவலகங்களில் சென்று தேர்வுக் கட்டணம் செலுத்துதல் என, தேர்வர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்பட்டது.
இதைத் தவிர்க்க திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி என, கல்வி மாவட்டங்கள் வாரியாக "நோடல்" மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு தனித் தேர்வர்களுக்கு இணைய புகைப்பட கருவி மூலம் புகைப்படம் எடுப்பது, விண்ணப்பம் சமர்ப்பிப்பது மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதி ஒரே இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நவ.,15 முதல் 25ம் தேதி வரை இம்மையங்களுக்கு சென்று, தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.
