அமெரிக்காவை போன்று இந்தியாவிலும் கம்யூனிட்டி கல்லூரிகள்: சசிதரூர்
அமெரிக்காவை போன்று இந்தியாவிலும் கம்யூனிட்டி கல்லூரிகள்: சசிதரூர்
UPDATED : நவ 14, 2013 12:00 AM
ADDED : நவ 14, 2013 11:52 AM
சென்னை: அமெரிக்காவிலுள்ள கம்யூனிட்டி கல்லூரிகளைப் போன்று, இந்தியாவில் மொத்தம் 200 கம்யூனிட்டி கல்லூரிகள் அமைக்கப்படும் என்று மத்திய மனிதவள இணையமைச்சர் சசிதரூர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது: மொத்தம் 200 கம்யூனிட்டி கல்லூரிகள் அமைப்பது இலக்காக இருந்தாலும், இந்த ஆண்டு மட்டும் 120 கல்லூரிகள் வரை அமைக்கப்படும். இக்கல்லூரிகள், அகடமிக் மற்றும் தொழில்துறை பயிற்சிகளை வழங்கும்.
மூன்று மாநிலங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தொழில்துறை பயிற்சி அளிப்பதற்காக ஒரு பைலட் திட்டத்தை, மனிதவள அமைச்சகம் மேற்கொண்டிருந்தது.
உலகளாவிய சேர்க்கை விகிதம் 29 என்பதோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 19 என்ற அளவில் உள்ளது. பல்கலைகளில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்க, கார்பரேட் நிறுவனங்கள் நிதியுதவி செய்ய முன்வர வேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் ஆராய்ச்சிகளில் 75%, தனியார் கார்பரேட் நிறுவனங்களால் நிதியுதவி செய்யப்படுபவையே என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
