தேசிய பாரா ஒலிம்பிக் போட்டி: தமிழகத்திற்கு 5 தங்கம்
தேசிய பாரா ஒலிம்பிக் போட்டி: தமிழகத்திற்கு 5 தங்கம்
UPDATED : நவ 16, 2013 12:00 AM
ADDED : நவ 16, 2013 09:34 AM
திண்டுக்கல்: மாற்றுத் திறனாளிகளுக்கான, தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற தமிழக வீரர்கள், ஐந்து தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.
பெங்களூருவில், 13வது தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி நடந்தது. மொத்தம், 176 பிரிவுகளாக நடந்த போட்டிகளில் 17 மாநிலங்களை சேர்ந்த 340 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். இதில், 15 மகளிர் உட்பட 39 பேர் பங்கேற்ற தமிழக அணிக்கு, திண்டுக்கல்லில் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்களில், 13 பேர், ஐந்து தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்றனர்.
இந்த வெற்றி மூலம், கடந்த ஆண்டு இப்போட்டியில், ஏழாவது இடத்தில் இருந்த தமிழகம், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே போட்டியில், சப் - ஜூனியர் மகளிர் பிரிவில், சென்னையை சேர்ந்த மயூரி மூன்று தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
சீனியர் ஆண்கள் பிரிவில் தர்மபுரியை சேர்ந்த வெங்கடேசன் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். மதுரையை சேர்ந்த பெருமாள் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
