UPDATED : நவ 16, 2013 12:00 AM
ADDED : நவ 16, 2013 09:39 AM
சென்னை: "கடந்த பொதுத் தேர்வின் போது, பிரவுசிங் சென்டர்களில் பல தவறுகள் ஏற்பட்டதால், அவற்றை களையும் பொருட்டு, நடப்பாண்டில் ஒருங்கிணைந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று அரசுத் தேர்வுகள் இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலை கல்வி பொதுத் தேர்வுகளுக்கு தனித் தேர்வர்களிடமிருந்து வரும் 18ம் தேதி முதல், 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித் தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கடந்த செப்டம்பர் பொதுத் தேர்வின் போது, தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்த போது, பல தவறுகள் காணப்பட்டன. பெயர், பிறந்த தேதி, பாடம், பயிற்று மொழி ஆகியவற்றில் தவறு இருந்ததால், ஹால் டிக்கெட் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த பணிகளை வெவ்வேறு இடங்களில் செய்ததால் தனித் தேர்வர்களுக்கு அலைச்சலும், பண விரயம், நேர விரயம் ஏற்பட்டது. இவற்றை தவிர்க்கும் பொருட்டும், பிழைகள் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்களை கொண்ட ஒருங்கிணைப்பு மையங்கள் (நோடல் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களின் விவரங்கள் மேலே கண்ட இணையதளத்தில் உள்ளது. மேலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களிலும் இந்த மைய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இம்மையங்கள் மூலமாகவே கட்டணங்களையும் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 03.06.2013 முதல் 30.06.2013 வரை மற்றும் 01.10.2013 முதல் 15.10.2013 வரை அனுமதிக்கப்பட்ட தேதிகளில், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புக்கு பெயர் பதிவு செய்யத் தவறியவர்கள் வரும், 29ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
