8ம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.ஜே.இ.இ., இலவச பயிற்சி!
8ம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐ.ஐ.டி.ஜே.இ.இ., இலவச பயிற்சி!
UPDATED : ஜன 18, 2009 12:00 AM
ADDED : ஜன 18, 2009 10:35 AM
அடுத்த கல்வியாண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு தொடர இருக்கும் இப்பயிற்சிக்கான போட்டித் தேர்வு ஜன.25ம் தேதி சென்னையில் நடக்கிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன.22.
‘பிட்ஜி’ (FIITJEE) நடத்தும் இந்த போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
இந்தியாவில் கவுரவம் மிக்க 16 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,) நிறுவனங்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏறத்தாழ 8 ஆயிரம் பேரை தேர்வு செய்ய, 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதவிருக்கின்றனர்.
ஐ.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம் முடிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச அளவில் உயர்மட்ட அளவிலான வேலையும் கைநிறைய சம்பளமும் கிடைக்கிறது. ஆகவே கடுமையான போட்டிக்குப் பின்னரே ஐ.ஐ.டி.,யில் இடம்பெற முடியும். முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வெற்றி பெறுவதற்கு உதவும்.
நுழைவுத் தேர்வு தொடர்பாக நகர்ப்புற மாணவர்கள் கவனமுடன் இருக்கின்றனர். சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் இவ்விஷயத்தில் பின்தங்கி இருக்கின்றனர். ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சியை எல்லா மாணவர்களும் பெற முடிவதில்லை. இக்குறையைப் போக்குவதற்காகவும், நாட்டின் மிகச்சிறந்த கல்வி அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகவும் தினமலர் கல்விமலர் மற்றும் சென்னையை சேர்ந்த ‘பிட்ஜி’ நிறுவனங்கள் இணைந்து இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இது குறித்து ‘பிட்ஜி’ சென்னை மைய தலைவர் அன்கூர் ஜெயின் தெரிவித்தபோது, ‘கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வசதிகுறைந்த, பின் தங்கிய மாணவர்கள் திறமையுடன் உள்ளனர். ஆனால் அவர்களிடம் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு குறித்து விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவச பயிற்சி அளித்து அவர்களை ஐ.ஐ.டி.,யில் சேர வைப்பதே பார்ச்சூனேட்-40 எனும் இத்திட்டத்தின் நோக்கம்’ என்றார்.
பெற்றோரின் மாத வருமானம் ரூ. 10 ஆயிரத்துக்குள் உள்ள, தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அடுத்த கல்வி ஆண்டு முதல், இதற்கான பயிற்சி சென்னை ‘பிட்ஜி’ நிறுவனத்தில் வழங்கப்படும். தற்போது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு துவக்கத்திலிருந்து 4 ஆண்டுகளுக்கு பயிற்சி பெற்று 2013ம் ஆண்டிலும், தற்போது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ‘பிளஸ் 1’ முதல் 2 ஆண்டுகளுக்கு பயிற்சி பெற்று 2011ம் ஆண்டிலும், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு எழுதுவார்கள்.
‘பிட்ஜி’யில் அளிக்கப்படும் பயிற்சி குறித்து கணித பேராசிரியர் தியாகராஜன் தெரிவித்தபோது, ‘கேள்விகளை கற்பனை செய்து பார்க்க வைத்து, அதை முழுமையாக புரிந்து கொள்ள நாங்கள் ஸ்டுடியோ வழியாகவும் மாணவர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கிறோம். இதனால் புரிந்து கொண்டு பதில் அளிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. பிட்ஜியில் பணிபுரியும் பெரும்பாலானோர் ஐ.ஐ.டி.,யில் கல்விபயின்றவர்கள்’ என்றார்.
விண்ணப்பப்படிவங்களை இலவசமாக டவுண்லோட் செய்ய: http://www.kalvimalar.com/fiitjee_entranceexam.asp
கூடுதல் விபரங்களைப் பெற தொடர்பு கொள்ள: 044-4285 9701
