UPDATED : ஜன 18, 2009 12:00 AM
ADDED : ஜன 18, 2009 11:29 AM
மும்பை: சந்திரனை ஆராய விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம், 100 நாட்களை கடந்து சாதனை படைத்து வருகிறது; முதல் 75 நாளில், 40 ஆயிரம் படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.
சந்திரனில் உள்ள வேதிப்பொருட்கள், கதிரியக்க சக்தியை கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட ஆளில்லா விண்கலம் சந்திரயான் - 1. கடந்தாண்டு அக்டோபர் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
மற்ற நாடுகள் அனுப்பிய விண்கலத்தை விட, இந்த விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் பெருமிதம் அடைந்துள்ளனர்.
சந்திரயான் விண்கலம், சந்திரனை 100 கி.மீ., தூரத்தில் சுற்றி வரும் போது, அதில் உள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள், விண்வெளியில் பல வகையில் படம் பிடித்துத் தள்ளியபடி உள்ளன. ஒரு நாளைக்கு 535 படங்கள் வீதம், முதல் 75 நாளில் 40 ஆயிரம் படங்களை அனுப்பியுள்ளது. விண்வெளிப்பகுதியின் மேற்பரப்பு தொடர்பான படங்கள் கிடைத்துள்ளன.
இந்த படங்களை பெரிதாக்கி பார்க்கும் வகையில், சக்தி வாய்ந்தவையாக உள்ளதால், விண்வெளி மேற்பரப்புகளை துல்லியமாக ஆராய வழி ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
