தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் 43 புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள்?
தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் 43 புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள்?
UPDATED : ஜன 23, 2009 12:00 AM
ADDED : ஜன 23, 2009 11:48 AM
இக்கல்லூரிகள் அனைத்தும் ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்காக காத்திருக்கின்றன.
கோவை அண்ணா பல்கலையின் கீழ் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில் 103 இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 11 கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்றவை. இவை தவிர, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புக்களை மட்டும் வழங்கும் 15 கல்லூரிகளும் உள்ளன.
கோவை மாவட்டத்தில் 18 இன்ஜி., கல்லூரிகள், சேலத்தில் 8, ஈரோட்டில் 3, நாமக்கல்லில் 6, கிருஷ்ணகிரியில் 3, தர்மபுரியில் 3, கரூரில் 2 என மொத்தம் 43 புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் துவக்கப்படவுள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும், இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.,) அனுமதிக்காக காத்திருக்கின்றன. அனுமதி கிடைத்ததும், கோவை அண்ணா பல்கலையின் அனுமதி கிடைக்கும்.
இவை தவிர, எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புக்களை மட்டும் நடத்த கோவையில் 12, சேலத்தில் 4, ஈரோட்டில் 4, நாமக்கல்லில் 2, தர்மபுரியில் 1 என 23 கல்லூரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்காக காத்திருக்கின்றன. இந்த கல்லூரிகள் அனைத்துக்கும் அனுமதி கிடைத்தால், கோவை அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரிகளின் எண்ணிக்கை 169 ஆக உயரும்.
மாணவர்கள் குழப்பம்: அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறை ஆட்டம் கண்டுள்ளது. இத்துறையைச் சேர்ந்த பல பொறியாளர்கள், வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் இன்ஜி., படிப்புகளில் சேருவதா என்ற குழப்பம் மாணவ, மாணவியரிடையே ஏற்பட்டுள்ளது.
கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இன்ஜி., பாடப்பிரிவுகளில் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் தைரியமாக சேரலாம். இந்த ஆண்டு வெளியேறும் மாணவர்களுக்கு மட்டும் வேலை கிடைக்க சிரமம் ஏற்படும். கடந்த 2001ல், தகவல் தொழில்நுட்பத்துறையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டது. பின் 2003ல் இருந்து அசுர வளர்ச்சி பெறத் துவங்கியது.
தற்போது ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சி, தற்காலிகமானது. வரும் 2010ம் ஆண்டில் இருந்து அத்துறை மீண்டும் எழுச்சி பெறத்துவங்கும். இவ்வாறு துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
