UPDATED : ஜன 25, 2009 12:00 AM
ADDED : ஜன 25, 2009 04:33 PM
துபாய்: கடுமையான பொருளாதாரப் பின்னடைவை துபாய் சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் இந்திய தொழில் முனைவோரான சன்னி வர்கி என்பவர் நடத்தி வரும் துபாய் மாடர்ன் உயர்நிலைப் பள்ளியில் கட்டணங்கள் அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
துபாய் மாடர்ன் உயர்நிலைப் பள்ளியை, உலக கல்வி மேலாண்மை அமைப்பு (ஜி.இ.எம்.எஸ்.,), நிர்வகித்து வருகிறது. இது வரும் இரண்டு கல்வியாண்டிற்கான கட்டணங்களை 90 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. 2009-10ம் மற்றும் 2010-11ம் கல்வியாண்டிற்கான கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டிற்கும் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த உலக கல்வி மேலாண்மை அமைப்பு போக்குவரத்துக் கட்டணங்களையும் கடந்தாண்டு உயர்த்தி உள்ளது.
இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், ‘பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ள சூழலில் பள்ளிக் கட்டணங்களை உயர்த்தி இருப்பது மட்டுமீறிய செயல். ஒரு பெற்றோராக நான் பெரிய ஆய்வகமோ, நீச்சல் குளமோ இருக்க வேண்டும் என விரும்பவில்லை. இந்த காரணங்களால் எனது பிள்ளைக்கு நல்ல கல்லூரியில் உறுதியாக சீட் கிடைக்கும் எனக் கூற முடியாது. பள்ளியின் கல்வித்தரம் நன்றாக உள்ளது; ஆனால் அதை மேலும் மேம்படுத்தவில்லை’ என்றார்.
இதற்கிடையில் சமீபத்தில் துபாய் மாடர்ன் உயர்நிலைப் பள்ளியில் இருந்து பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில், ‘பள்ளி கட்டடம் வேறு வளாகத்திற்கு மாற்றப்படுவதால், பள்ளிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களின் சீற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
