காலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்கள் கொதிப்பு
காலியிடங்கள் அறிவிப்பதில் தாமதம்: முதுகலை ஆசிரியர்கள் கொதிப்பு
UPDATED : ஜூன் 25, 2014 12:00 AM
ADDED : ஜூன் 25, 2014 10:23 AM
சிவகங்கை: அரசுப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் நற்று நடந்தது. காலியிடங்கள் குறித்த விபரம் வெளியிட தாமதம் ஆனதால் ஆசிரியர்கள் பரிதவித்தனர்.
முதுகலை ஆசிரியர்களுக்கான வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. சிவகங்கையில் காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய கலந்தாய்வு மதியம் 3 மணி வரை துவங்கவில்லை. கல்வித்துறை ஊழியர்கள் ஆன்-லைனில் தயார் நிலையில் இருந்தும், காலியிட விபரம் வெளியிடப்படவில்லை. சொந்த ஊர் மாறுதல் கனவில் வந்த ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் காத்துக்கிடந்தனர். ஒரு வழியாக 3 மணிக்கு மேல் கலந்தாய்வு துவங்கியது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆன்-லைன் இணைப்பில் தயார் நிலையில் இருந்தும் காலியிட விபரம் தெரியவில்லை. சென்னை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து காலியிடங்கள் அறிவித்தால் மட்டுமே, நாங்களும் ஆன்-லைனில் தெரிவிக்க முடியும் என்றார்.
ஆசிரியர்கள் கூறுகையில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடியை சேர்ந்த பலர் இம்மாவட்டத்தில் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிகிறோம். கலந்தாய்வு நடக்கவே இவ்வளவு தாமதம் ஏற்படுகிறது. தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சில முக்கியமான இடங்கள் மறைக்கப்பட்டுள்ளன. காலியிடம் இருப்பது குறித்த தெரிந்தாலும் கேட்க முடியவில்லை. புதிய நியமனத்திற்காகவும் சில இடங்கள் மறைக்கப்படுகின்றன என்றனர்.