பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் உண்டு: உயர்நீதிமன்றம்
பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் உண்டு: உயர்நீதிமன்றம்
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 02:19 PM
மதுரை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு அதிகாரம் உள்ளது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் அரசு பழங்குடியினர் உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்தவர் ரசாலம். இவர், நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்த பிளஸ் 2 மாணவர்களை, கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, போராட்டத்தை தூண்டினார் எனக்கூறி, கன்னியாகுமரி கலெக்டர் 2013 ல் சஸ்பெண்ட் செய்தார்.
இதை எதிர்த்து ரசாலம், என் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிதான் நடவடிக்கை எடுக்க முடியும். விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கவில்லை. கலெக்டர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. கலெக்டர் தரப்பில், தேர்வு சமயத்தில் மாணவர்களை படிக்கவிடாமல், கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்தார். இது நன்னடத்தையை மீறிய செயல் என வலியுறுத்தப்பட்டது.
நீதிபதி: கலெக்டர்தான் மாவட்டத்திற்கு தலைவர். அனைத்துத் துறைகளுக்கும் பொறுப்பானவர். பொதுத் தேர்வு துவங்க 5 நாட்களுக்கு முன்பு, மாணவர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு, மனுதாரர் அழைத்து வந்தது நன்னடத்தையை மீறிய செயல். இது பற்றி, குழந்தைகள் நலக்குழு, நேசமணி நகர் போலீசில் புகார் செய்துள்ளது.
மனுதாரர் மீது கலெக்டர் முதலில் நடவடிக்கை எடுத்தாலும், பின் ஆதிதிராவிடர் நலத்துறையின் ஒப்புதல் பெற்றுள்ளார். இதில் தவறு காண முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
