மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும்: முதல்வர்
மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும்: முதல்வர்
UPDATED : ஆக 16, 2014 12:00 AM
ADDED : ஆக 16, 2014 10:32 AM
சென்னை, கோட்டை கொத்தளத்தில், தேசியக் கொடியேற்றி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது பழமொழி. ஏழை சொல்தான், புனித ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும் என்ற புதுமொழியை, தமிழகத்தில் நிலைநாட்டிக் கொண்டிருப்பது இந்த அரசு. விளை நிலங்கள் வழியே, கெய்ல் நிறுவன குழாய் பதிப்பு திட்டம்; தஞ்சையில், மீத்தேன் எரிவாயு திட்டம்; மரபணு மாற்று விதை திட்டம்; சில்லரை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீடு போன்றவற்றை உறுதியாக எதிர்க்கும் அரசாக உள்ளது.
சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் 9,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய்; அவர்களின் வாரிசுகளுக்கான குடும்ப ஓய்வூதியம், 4,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம், 1,955 பேர் பயன்பெறுவர். அரசுக்கு, ஆண்டுக்கு 1.43 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்து ராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆகியோரின் வழித் தோன்றல்கள், வ.உ.சிதம்பரனாரின் பேரன் ஆகியோருக்கு, 2,000 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது, இனி 4,500 ரூபாயாக உயர்த்தப்படும். இதன்மூலம், 195 பேர் பயனடைவர். அரசுக்கு, ஆண்டுக்கு 58.50 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
