தனியார் நடத்தும் விடுதிகளிலும் ராகிங் குறித்து ஆய்வு: கவர்னர் ரோசய்யா
தனியார் நடத்தும் விடுதிகளிலும் ராகிங் குறித்து ஆய்வு: கவர்னர் ரோசய்யா
UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 10:48 AM
தமிழகத்தில் ராகிங் குறித்த மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவின் ஐந்தாவது கூட்டம் ராஜ்பவனில் நடந்தது. கூட்டத்தில் கவர்னர் ரோசய்யா பேசியதாவது: தமிழகம் ராகிங் இல்லாத மாநிலம் என்ற இலக்கை விரைவில் எட்ட வேண்டும்.
கடந்தாண்டில் ராகிங் குறித்து 34 புகார்கள் வந்தன. கல்வி நிறுவனங்களுக்கு வெளியில் தனியாரால் நடத்தப்படும் வர்த்தக ரீதியிலான விடுதிகள் பதிவு குறித்த சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரைகளை நிறைவேற்ற, இந்த ஆண்டு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
ராகிங் குறித்து விழிப்புடன் இருப்பதுடன், தனியார் விடுதிகளிலும் ராகிங் தொடர்பாக சோதனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புகார்கள் குறித்து டி.ஜி.பி. ராமானுஜம் பேசுகையில், "இந்த ஆண்டில் பதிவான ஐந்து வழக்குகளில், மூன்று, சட்டக் கல்லூரியில் நடந்தவை. இம்மாதம் 7ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 18 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் சில போலியானவை" என்றார்.
கூட்டத்தில் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், தலைமை செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, உயர்கல்வித்துறை செயலர் ஹேமந்த்குமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
