9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.,26ல் மாநில அளவிலான அடைவுத் தேர்வு
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.,26ல் மாநில அளவிலான அடைவுத் தேர்வு
UPDATED : ஆக 21, 2014 12:00 AM
ADDED : ஆக 21, 2014 01:54 PM
விருதுநகர்: "தமிழகத்தில் 9ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டை கண்டறிய மாநில அளவிலான அடைவு தேர்வு ஆக.,26ல் நடக்கிறது" என அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தரவு: 2014-15ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டை அளவிடும் பொருட்டு, மாநில அளவிலான அடைவுத்தேர்வு (achievement test) ஆக., 26ல் நடத்தப்பட உள்ளது.
இதன்மூலம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன், எழுதுதல் திறன் மற்றும் அடிப்படை கணித செயல்பாடுகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றில் பெற்றுள்ள அறிவை கண்டறிந்து மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
இத்தேர்வு ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 பள்ளிகள் வீதம் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணிவரை நடத்தப்பட உள்ளது. பள்ளியில் 30 மாணவர்கள் இருந்தால் அனைவரையும் தேர்வு மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 30க்கு மேல் இருந்தால் தன்னிச்சை தேர்வு முறையில் 30 மாணவர்களை தேர்வு செய்து வினாத்தாள்களை அளிக்க வேண்டும்.
அந்த வட்டாரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள் அல்லது திறமையான ஆசிரியர்களை தேர்விற்கான களப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும். மாணவர்கள் வினாத்தாளிலேயே விடையளித்தல் வேண்டும். புரிந்து எழுதுதல், சொந்தமாக எழுதுதல், சொல்வதை எழுதுதல் (கேட்டல்) அடிப்படையில் அவர்களின் திறன்களை மதிப்பீடு செய்தல் வேண்டும்.
இதில் மாணவர்கள் எழுதிய பதில் விபரங்களை ஆக., 28க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் அதனை சிடியில் பதிவு செய்து, செப்.,8க்குள் சென்னையில் உள்ள இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் 9ம் வகுப்பு மாணவர்களின் திறன்களை கண்டறிந்து, அதை மேம்படுத்தி, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அவர்களை அதிக மதிப்பெண்பெற வைக்கும் வகையில், இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதன்மூலம் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்கும்" என்றார்.
தேர்வு கால அட்டவணை
தமிழ் - காலை 9.30 மணி முதல் பகல் 11 மணி வரை
ஆங்கிலம் - பகல் 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை
கணிதம் - மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணிவரை.
