காலை நேரத்தில் பஸ் நிறுத்தப்படாததால் பள்ளி மாணவர்கள் அவதி
காலை நேரத்தில் பஸ் நிறுத்தப்படாததால் பள்ளி மாணவர்கள் அவதி
UPDATED : ஆக 22, 2014 12:00 AM
ADDED : ஆக 22, 2014 11:09 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில், காலை நேரத்தில் பஸ் நிறுத்தப்படாததால், பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே சின்னாம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர் பொள்ளாச்சிக்கு மேல்நிலைக்கல்வி பயில வந்து செல்கின்றனர். இவர்கள் பொள்ளாச்சி செல்ல அரசு நகர பஸ்சையே (டவுன் பஸ்) நம்பியுள்ளனர்.
ஆனால், காலை நேரங்களில், இப்பகுதியில் பஸ் நிற்காமல் செல்வதால், மாணவ, மாணவியர் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் கூறுகையில், "காலை நேரங்களில், பள்ளி மாணவர்கள் அவசர அவசரமாக பஸ் ஏறுவதற்காக வந்து சின்னாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கின்றனர்.
ஆனால், காலை 8:00 மணி முதல் 8:30 மணி வரையுள்ள நேரத்தில் வரும் அரசு பஸ்கள் முறையாக பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்படுவதில்லை. இதனால், மாணவ, மாணவியர் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல்அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அரசு பஸ் நிறுத்தப்படாததால், இலவச பஸ் பாசையும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. அடுத்து வரும் தனியார் பஸ்சில், கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே, காலை நேரங்களில், சின்னாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில், பஸ்சை நிறுத்தி, மாணவர்களை ஏற்றிச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
