விவசாயிகளுக்காக குறைந்த செலவில் தாவர எண்ணெய் தயாரிக்கும் காந்திகிராம பல்கலை!
விவசாயிகளுக்காக குறைந்த செலவில் தாவர எண்ணெய் தயாரிக்கும் காந்திகிராம பல்கலை!
UPDATED : ஆக 22, 2014 12:00 AM
ADDED : ஆக 22, 2014 11:45 AM
திண்டுக்கல்: டீசல் மோட்டர்களில் எரிபொருளாக பயன்படும் தாவர எண்ணெய்யை, மிக குறைந்த செலவில் தயாரித்து விவசாயிகளுக்கு காந்திகிராம பல்கலை வழங்குகிறது.
இலுப்பை, காட்டாமணக்கு, புங்கம், புண்ணை போன்ற தாவரங்களின் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் தாவர எண்ணெய் டீசலுடன் கலந்து எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனை பம்புசெட் டீசல் மோட்டார்களில் பயன்படுத்தலாம்.
இதில் டீசல் 80 சதவீதமும், தாவர எண்ணெய் 20 சதவீதமும் கலந்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்காது. விவசாயிகளுக்கு தாவர விதைகள் எளிதில் கிடைத்தாலும் அவற்றை அரைப்பதற்கான இயந்திரம் அமைப்பது இயலாத காரியமாக உள்ளது.
விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையில் தாவர எண்ணெய் தயாரித்து கொடுக்க காந்திகிராம பல்கலையில் ரூ.15 லட்சம் செலவில் இயந்திர யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு கிலோ விதை ரூ.1க்கு அரைத்து தரப்படுகிறது. ஒரு கிலோ விதையில் இருந்து 300 முதல் 350 மி.லி., வரை தாவர எண்ணெய் கிடைக்கிறது.
எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கும் விவசாயிகளுக்கே இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதனை இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தலாம்.
பயிர் பாதுகாப்புத்துறை பேராசிரியர் ஜி.எஸ்.கண்ணன் கூறியதாவது: தாவர விதைகள் கிலோ ரூ.5 க்கு கிடைக்கிறது. ஒரு லிட்டர் தாவர எண்ணெய் தயாரிக்க ரூ.20 மட்டுமே செலவாகும்.
இதன்மூலம் அன்னியசெலவாணி மிச்சமாகும். விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் இலுப்பை, காட்டாமணக்கு, புங்கம், புண்ணை மரங்களை வளர்த்து விதைகளை சேகரிக்கலாம். 24 மணிநேரமும் விதைகளை அரைத்து தருகிறோம் என்றார். தொடர்புக்கு:94423 61142.
