பயிற்சி முடிந்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம்
பயிற்சி முடிந்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம்
UPDATED : ஆக 25, 2014 12:00 AM
ADDED : ஆக 25, 2014 11:56 AM
மதுரை: மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டி.இ.ஓ.,க்கள், டி.இ.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உட்பட மாவட்ட கல்வி அலுவலர் அந்தஸ்தில், மாநில அளவில் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிகளை நிரப்ப, டி.இ.ஓ. பதவி உயர்வு பட்டியலில் உள்ள 27 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், 19 மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், என மொத்தம் 46 பேருக்கு பதவி உயர்வு அளிக்க, ஆக.,11 முதல் 23 வரை டி.இ.ஓ.,க்களுக்கான சிறப்பு பயிற்சி சென்னை யில் அளிக்கப்பட்டது.
இதில், தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நிர்வாக திறன், பள்ளிகளில் ஆய்வு நடத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை நிறைவு செய்தவுடன் அவர்களுக்கு பதவி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. அதே நேரத்தில், மாநில அளவில் 55 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருக்கின்றன. இவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
டி.இ.ஓ., சிறப்பு பயிற்சி முடித்த சிலர் கூறுகையில், "இந்தாண்டு தான் இந்த பயிற்சி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை முடித்து, டி.இ.ஓ., கனவில் இருக்கிறோம். தொடர்ந்து ஏமாற்றம் தான். பதவி உயர்வு உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்றனர்.
