பள்ளிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக்கை மாற்றம் செய்ய கோரிக்கை
பள்ளிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக்கை மாற்றம் செய்ய கோரிக்கை
UPDATED : ஆக 26, 2014 12:00 AM
ADDED : ஆக 26, 2014 10:51 AM
உத்திரமேரூர்: சாலவாக்கத்தில், பள்ளிக்கு அருகாமையில் உள்ள, டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அப்பகுதியை சுற்றி உள்ள, ஆலப்பாக்கம், அன்னாத்துார், புலிப்பாக்கம், கிடங்கரை, கிளக்காடி, எடமச்சி, பொற்பந்தல், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பகுதியில், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகாமையில், அரசின் டாஸ்மாக் இயங்கி வருகிறது. டாஸ்மாக் வரும் குடிமகன்கள், பள்ளி வளாகத்தின் பின்புறம் மற்றும் அப்பகுதியை சுற்றி உள்ள இடங்களில் அமர்ந்து, மது அருந்துகின்றனர். இதனால், பள்ளி மாணவர்களின் கவனம் திசை திரும்புவது மட்டுமின்றி, மாணவர்களுக்கு குடி பழக்கத்தை துாண்டும் வகையில் இருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர் கவலையடைந்து வருகின்றனர்.
மேலும், கிளக்காடி, எடமச்சி, பொற்பந்தல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவியர் மதுபான கடை இருக்கும், இந்த சாலை வழியாகத்தான், தினமும் பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது. அவர்கள், குடிமகன்கள் தொந்தரவில் சிக்கி தவிக்கின்றனர். எனவே இப்பகுதியில் பள்ளிக்கு அருகாமையில் இயங்கும் டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
