மாணவர்கள் கால்பந்து போட்டியில் எம்.சி.சி., பள்ளி அணி சாம்பியன்
மாணவர்கள் கால்பந்து போட்டியில் எம்.சி.சி., பள்ளி அணி சாம்பியன்
UPDATED : ஆக 26, 2014 12:00 AM
ADDED : ஆக 26, 2014 12:29 PM
எழும்பூர்: பள்ளி அளவிலான, மாணவர்கள் கால்பந்து போட்டியில், எம்.சி.சி., பள்ளி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
சென்னை வெட்ரன் கால்பந்து கிளப், தினமலர் நாளிதழ் ஆதரவுடன், டான் பாஸ்கோவின் நுாறாவது பிறந்த நாளையொட்டி, கால்பந்து போட்டியை, எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடத்தியது. அதில், டான் பாஸ்கோ, மணலி அரசு பள்ளி, பேட்ரீக்ஸ் உள்ளிட்ட 16 பள்ளி அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி அணியும், செங்குன்றம் டான் பாஸ்கோ அணியும் மோதின. ஆட்டம் துவங்கிய, முதலாவது நிமிடத்தில், எம்.சி.சி., பள்ளி மாணவர், லோகேஷ், முதல் கோலை அடித்தார். அதே அணியின் மாணவர் பிரபு, 10வது நிமிடத்தில், இரண்டாவது கோல் போட்டார்.
எம்.சி.சி., வீரர் லோகேஷ், 13வது நிமிடத்தில், மீண்டும் ஒரு கோலை அடித்தார். அதனை தொடர்ந்து, டான்பாஸ்கோ பள்ளி மாணவர் கமலேஷ், 14வது நிமிடத்தில், முதல் கோலை, தன் அணிக்காக அடித்தார். ஆட்ட நேர முடிவில், எம்.சி.சி., பள்ளி அணி, 3-1 என்ற கோல் கணக்கில், டான் பாஸ்கோ அணியை வீழ்த்தி, சாம்பயின் பட்டத்தை தட்டிச் சென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு, வருமான வரி கூடுதல் ஆணையர், மதிவாணன், கோப்பையை வழங்கினார். அரையிறுதியில் ஹாட்ரிக் கோல் மற்றும் இறுதி போட்டியில் இரண்டு கோல் அடித்த, எம்.சி.சி., மாணவர் லோகேஷ், தொடர் நாயகன் விருது பெற்றார்.
செயின்ட் பேட்ரீக்ஸ் மாணவர், அபேஸ், சிறந்த கோல் கீப்பர் விருது பெற்றார். பெரம்பூர், டான் பாஸ்கோ, சிறந்த அணிக்கான பரிசு பெற்றது.
