UPDATED : ஆக 27, 2014 12:00 AM
ADDED : ஆக 27, 2014 11:30 AM
உடுமலை: தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான, மாநில அளவிலான விளையாட்டு திறனறிதல் போட்டி, உடுமலை அரசு கலைக் கல்லூரியில் துவங்கியது.
தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு, தேசிய மாணவர் படை மாணவர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, மாநில அளவிலான விளையாட்டு திறனறிதல் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டி, செப்., 3 வரை நடைபெறும். சென்னை-ஏ, சென்னை-பி, திருச்சி, மதுரை, கோவை, புதுச்சேரி உட்பட ஆறு மண்டலங்களில் இருந்து 750 மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, எறிபந்து, கோ-கோ, ஹாக்கி, தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளின் இறுதியில், நாக்-அவுட் முறையில் 125 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அம்மாணவர்களுக்கு டில்லியில் நடைபெற இருக்கும், 17 மண்டலங்கள் அளவிலான போட்டியில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும்.
கோவை மண்டல தேசிய மாணவர் படை அதிகாரி கர்னல் மேத்யூஸ், ராணுவ அதிகாரிகள் 32 பேர், தேசிய மாணவர் படை அதிகாரிகள் 10 பேர், உடுமலை அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி மேஜர் ராமலிங்கம் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
