ஐந்து மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலி இல்லை!
ஐந்து மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலி இல்லை!
UPDATED : செப் 02, 2014 12:00 AM
ADDED : செப் 02, 2014 12:26 PM
சென்னை: சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில், பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை. எனவே, நாளை (3ம் தேதி), மாவட்டத்திற்குள் நடக்கும் கலந்தாய்வுக்கு, ஐந்து மாவட்டங் களுக்கு, யாரும் செல்ல வேண்டாம் என, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிவிப்பு: பள்ளிக்கல்வித் துறையில், புதிதாக, 10,444 பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணி நியமன கலந்தாய்வு, நாளை (3ம் தேதி) துவங்குகிறது. நாளை, மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
இதில், சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில், பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலி இல்லாததால், நாளைய கலந்தாய்வுக்கு, மேற்கண்ட ஐந்து மாவட்டங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம். வேறு மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங் களுக்கு, 4ம் தேதியும், 5ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது. இந்த தேதிகளில், தங்கள் மாவட்டத்தில் உள்ள கலந்தாய்வு மையத்திற்கு, புதிய ஆசிரியர் செல்லலாம். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தொடக்கக் கல்வித்துறையில், மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. 1,649 இடங்களில் 795 இடங்கள் நிரம்பியதாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார். இன்று, வேறு மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை நிரப்ப கலந்தாய்வு நடக்கிறது.
