புத்தக கண்காட்சியில் அனைத்து ஸ்டால்களிலும் தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!
புத்தக கண்காட்சியில் அனைத்து ஸ்டால்களிலும் தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!
UPDATED : செப் 03, 2014 12:00 AM
ADDED : செப் 03, 2014 10:44 AM
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியில், அனைத்து ஸ்டால்களிலும் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் செப்., 7 வரை நடைபெறும் புத்தக கண்காட்சியில் தமிழ், ஆங்கிலத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து ஸ்டால்களிலும் குறைந்தபட்ச தள்ளுபடி விலையாக 10 சதவீதம் தள்ளுபடியும், சில ஸ்டால்களில் புத்தகங்களை பொறுத்து, 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
20, 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள், எடை குறைவான புத்தகங்களாக, குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. வெளிநாட்டு பதிப்புகளாக உள்ள அகராதிகள், பல மொழிகளில் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல தலைப்புகளிலான புத்தகங்களும், ஆய்வுக்குரிய புத்தகங்களையும் ஒரே இடத்தில் தேர்வு செய்வதற்கு வசதியாக இக்கண்காட்சி அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப, அரங்கத்தின் முன் நடமாடும் ஏ.டி.எம்., வசதி செய்யப்பட்டு உள்ளன. செப்., 7 வரை தினமும் மாலை 6 மணிக்கு பல தலைப்புகளில் சொற்பொழிவாளர்கள் பேசுகின்றனர். நாளை மாலை 6.30 மணிக்கு பட்டிமன்றம், செப்., 5ல் மாலை 4.30 மணிக்கு நாட்டிய சங்கமம் என கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. செப்., 4ல் (நாளை) காலை 10 மணிக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடக்கிறது.காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.
