மாணவியர் பள்ளி இடைநிற்றலை தடுக்க விடுதி வசதிகள் ஏற்படுத்தப்படுமா?
மாணவியர் பள்ளி இடைநிற்றலை தடுக்க விடுதி வசதிகள் ஏற்படுத்தப்படுமா?
UPDATED : செப் 03, 2014 12:00 AM
ADDED : செப் 03, 2014 12:43 PM
மானாமதுரை: மானாமதுரையில் பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவிகள் விடுதி இல்லாததால், பெரும்பாலான மாணவிகள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் நிலை உருவாகி உள்ளது.
மானாமதுரை சுற்று வட்டாரத்தில், தெ.புதுக்கோட்டை, வேதியரேந்தல், அன்னவாசல்,தீயனூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயில மானாமதுரை வருகின்றனர். மானாமதுரையில் 1961ல் பெண்களுக்கு தனியாக உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டு 1986ல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவிகளும் மானாமதுரையில் படிக்கின்றனர். இங்குள்ள மாணவிகளுக்கு உடைகுளம் பகுதியில் ஆதிதிராவிடர் நல விடுதி, 69 மாணவிகளுடன் செயல்பட்டு வருகிறது. இதில், ஒதுக்கீட்டு அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் மூன்று பேர் மட்டுமே தங்கி படிக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு என விடுதி வசதி இல்லாததால், பெரும்பாலான மாணவிகள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.
மானாமதுரை பெண்கள் பள்ளியில் ஆயிரத்து 628 மாணவிகள் படிக்கின்றனர். இதில் 69 மாணவிகளுக்கு மட்டுமே, விடுதி வசதி உள்ளது. விடுதி வசதி இல்லாததாலும், போதுமான கல்வியறிவு இல்லாத சூழலிலும் 8, 9ம் வகுப்பு படிக்கும்போதே மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிலையும் தொடர்கிறது. சமீபகாலமாக, மானாமதுரையைச் சுற்றிலும் 15 வயதுடைய குழந்தை திருமணங்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
தெ.புதுக்கோட்டை கிராமத்தில் இருந்து மானாமதுரை வந்து செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இதுபோல பல கிராமங்களில் இருந்து மானாமதுரை வந்து செல்ல கூடுதல் நேரம் செலவாகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ் இருப்பதால், பஸ் ஸ்டாப்பில் மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்து வீட்டிற்கு செல்கின்றனர். இதனால் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடிவதில்லை. நீண்ட தூர கிராமத்தில் இருந்து வந்து படிக்கும் மாணவிகள் போக்குவரத்து வசதி, உணவு வசதி, தங்குமிட வசதி இல்லாததால் படிப்பை பாதியிலேயே பெற்றோர் நிறுத்தி விடுகின்றனர்.
மேலும் வீட்டில் பெண்களை தனியாக விட்டுவிட்டு வேலைக்கு செல்ல முடியாது என்பதால், 10ம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்து வைத்து விட்டு, தங்கள் கடமை முடிந்து விட்டதாக பெற்றோர் நினைக்கின்றனர்.
சின்னக்கண்ணணூர் சுகன்யா கூறும்போது: மானாமதுரையிலிருந்து எங்களது ஊர் 14 கி.மீ., தூரத்தில் உள்ளது. தினசரி காலை மற்றும் மாலை என இரண்டு வேளை தான் பஸ் வசதி உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பஸ்சை பிடிக்க முடியாவிட்டால், மானாமதுரையில் உறவினர் வீட்டில் தங்க நேரிடும். இதற்காகவே பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர் என்றார்.
திருப்புவனம், சிவகங்கை உள்ளிட்ட ஊர்களில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் என இருதரப்பினருக்கும் தனித்தனி விடுதி இருப்பதால், அங்கு இடம் பிடிக்க போட்டி நிலவுகிறது. மானாமதுரையில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி தொடங்கப்பட்டால் கூடுதல் மாணவியர் கல்வியறிவு பெற ஏற்படும்.
