டூ வீலரில் பள்ளிக்கு வரும் மாணவர்களைக் கண்காணிக்க சுற்றறிக்கை
டூ வீலரில் பள்ளிக்கு வரும் மாணவர்களைக் கண்காணிக்க சுற்றறிக்கை
UPDATED : செப் 04, 2014 12:00 AM
ADDED : செப் 04, 2014 11:45 AM
புதுச்சேரி: டூ வீலர் ஓட்டிக் கொண்டு பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளை கண்காணிக்க வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும், போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
புதுச்சேரியில், குறிப்பிட்ட வயது நிரம்பியவர்களுக்கு, கியர் இல்லாத டூ வீலர்களை ஓட்டவும், குறிப்பிட்ட வயது நிரம்பியவர்களுக்கு, கியருடன் கூடிய டூ வீலர்களை ஓட்டவும் உரிமம் வழங்கப்படுகிறது.
இருந்தபோதும், லைசன்ஸ், எல்.எல்.ஆர்., எதுவும் பெறாமல் மாணவ, மாணவிகள் டூ வீலர்களை ஓட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்கின்றனர். இதனால், விபத்துகள் நடப்பதுடன், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, மாணவ மாணவிகள் டூ வீலர்களில் பள்ளிக்கு வருவதற்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன் காரணமாக, லைசன்ஸ் இல்லாமல், பள்ளிக்கு டூ வீலர்களில் மாணவர்கள் வருவது குறைந்துள்ளது. தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும், பள்ளி மாணவ மாணவிகள் லைசன்ஸ் இல்லாமல் டூ வீலர்கள் ஓட்டுவதற்கு தற்போது கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகள், தனியார் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்துக்கும், போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. லைசன்ஸ் இல்லாமல், டூ வீலர்களை மாணவ மாணவிகள் ஓட்டுவதால் பல விபத்துகள் நடக்கிறது; எனவே டூ வீலர்களில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் லைசன்ஸ் வைத்துள்ளார்களா என்பதை பள்ளி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும் என, சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, டூ வீலர்கள் ஓட்டும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக லைசன்ஸ் எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்துகின்றன. வயது குறைவானவர்கள் டூ வீலர்கள் ஓட்டி வந்தால், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
