அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்
UPDATED : நவ 08, 2014 12:00 AM
ADDED : நவ 08, 2014 11:29 AM
காரியாபட்டி: காரியாபட்டி அருகே கழுவனச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அடிப்படை வசதிகளின்றி சிரமப்படுகின்றனர்.
கழுவனச்சேரியில் அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை உயர் படிப்புக்கு பல கி.மீ.,தூரம் நடந்து சென்று வந்ததால் ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பள்ளியின் தரம் உயர்ந்ததே தவிர மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டடங்களை கட்ட முன் வரவில்லை.
நடுநிலைப் பள்ளியாக இருந்தபோது ஒரு கட்டடம் கட்டப்பட்டது. உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்த பின் கட்டடங்கள் கட்டப்படவில்லை. 150 க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இங்கு, போதிய கட்டட வசதி இல்லாததால் 6,7 ம் வகுப்பு மாணவர்கள் அங்குள்ள சமுதாய கூடத்தில் படிக்கின்றனர். காற்றோட்ட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்குமிங்கும் அலைகின்றனர்.
சமுதாய கூடத்தில் நிகழ்ச்சி நடக்கும் நேரங்களில் மரத்தடியில் வைத்து பாடம் கற்பிக்கின்றனர். மழை காலத்தில் சமுதாய கூடத்தில் நிகழ்ச்சி நடந்தால் இடநெருக்கடியில் படிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி போதிய கட்டடங்களை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

