துவக்கப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவு
துவக்கப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவு
UPDATED : நவ 08, 2014 12:00 AM
ADDED : நவ 08, 2014 01:53 PM
உடுமலை: துவக்கப்பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
வரும் 2015-16 கல்வியாண்டில், புதிதாக தொடங்க வேண்டிய துவக்கப்பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய துவக்கப்பள்ளிகள் குறித்த பட்டியலை, உடனடியாக தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 2015-16 கல்வியாண்டில், துவக்கப்பள்ளிகள் இல்லாத குடியிருப்பு பகுதிகளில், பள்ளிகளை துவக்கும் பொருட்டு, கடந்த மாதம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மையங்களில் பள்ளிகள் தேவைப்படும் குடியிருப்பு பகுதிகளின் பட்டியலை பெற்று, தனி நபரைக்கொண்டு, நேரடியாக தொடக்கக்கல்வி இயக்ககத்தில், வரும் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய, துவக்கப்பள்ளிகளின் பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

