பதிவைப் புதுப்பித்தலுக்கான மறுவாய்ப்பு எப்போது? - ஏக்கத்தில் 8 லட்சம் பேர்
பதிவைப் புதுப்பித்தலுக்கான மறுவாய்ப்பு எப்போது? - ஏக்கத்தில் 8 லட்சம் பேர்
UPDATED : நவ 15, 2014 12:00 AM
ADDED : நவ 15, 2014 12:11 PM
மதுரை: வேலைவாய்ப்பு பதிவு விடுபட்டோர், பதிவை புதுப்பிக்க அரசு அறிவிப்பு எப்போது வெளியாகும் என, 8 லட்சம் பேருக்கு மேல் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு, நியமனத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க வேண்டிய நாளை தவறவிட்டால், 18 மாதங்களுக்குள் மீண்டும் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
அதற்கு மேல் ஆகிவிட்டால், ஆண்டுதோறும் சலுகை உத்தரவை அரசு அறிவிக்கும்போது பதிவை மீண்டும் புதுப்பிக்கலாம். 2011 - 2013ம் ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு இப்படியொரு வாய்ப்பு வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார்.
ஆனால் அது இதுவரை அரசாணையாக வெளியிடப்படவில்லை. அந்த அறிவிப்பை எதிர்பார்த்து தமிழகத்தில் 10 சதவீதம் பேர் (8 லட்சத்திற்கும் மேல்) காத்திருக்கின்றனர்.
பதிவு தகுதி இருந்தால்தான் பணியில் சேர முடியும் என்பதால், ஆசிரியர் தேர்வு வாரியம் உட்பட பல போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கக் கூட தயங்கிய நிலையில் பலர் உள்ளனர். ஒரு அறிவிப்பில் பல லட்சம் பேர் பயனடைவர். அரசுக்கு எவ்விதத்திலும் நிதியிழப்பு வராது, எனவே உடனே வாய்ப்பளிக்க வேண்டும் என, பதிவுதாரர்கள் தெரிவித்தனர்.

