"சமூகத்திற்கு பயன்தர கூடிய ஆராய்ச்சிகளை மாணவர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்"
"சமூகத்திற்கு பயன்தர கூடிய ஆராய்ச்சிகளை மாணவர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்"
UPDATED : நவ 21, 2014 12:00 AM
ADDED : நவ 21, 2014 12:31 PM
காந்திகிராமம்: சமூகத்திற்கு பயன்தர கூடிய ஆராய்ச்சிகளை மாணவர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும், என காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார்.
காந்திகிராம பல்கலையில் வேலைவாய்ப்பு மையம் சார்பில் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு கருவிகளை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த பயிலரங்கம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் செல்வின் ஜெபராஜ் நார்மன் வரவேற்றார்.
துணைவேந்தர் நடராஜன் பேசியதாவது: தேசிய பல்கலை தர மதிப்பீட்டு குழு உயர்கல்வி நிறுவனங்களை நுாலக பயன்பாடு அடிப்படையில் மதிப்பிடுகிறது. இதற்காக காந்திகிராம பல்கலை நுாலகம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. ரூ.16.8 லட்சத்தில் தனியாக மின் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. பல்கலையில் செய்யப்படும் ஆய்வுகள், மாணவர்களின் ஆராய்ச்சிதிறனை மேம்படுத்த ரூ.8 லட்சத்தில் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.
பல்கலை செயல்பாடுகள் அனைத்தும் இணையம் மூலம் ஒருங்கிணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சி மாணவர்கள் சமுதாயத்திற்கு பயன்தரக் கூடிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். பன்னாட்டு இதழ்களில் ஆய்வு கண்டுபிடிப்புகள் வெளிவர முயற்சிக்க வேண்டும். ஆய்வு தொடர்பான அன்றாட தகவல்களை தொகுத்து கொண்டே வந்தால்தான் அவை செம்மைப்படும், என்றார்.
புதுவை பல்கலை நுாலகர் சேவியர், கிளை நுாலகர் மதுரஜோதி பேசினர். பல்கலை உதவி நுாலகர் தனவந்தன் எழுதிய, காலத்திற்கேற்ற நுாலக வளர்ச்சி மற்றும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட நுாலகப்பட்டியல் ஆகிய நுால்களை சமூகஅறிவியல் டீன் பேராசிரியர் சுப்புராஜ் வெளியிட்டார். பல்வேறு பல்கலைகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

