உறங்கவிடாத கனவுகளை மாணவர்கள் காண வேண்டும்: அப்துல் கலாம்
உறங்கவிடாத கனவுகளை மாணவர்கள் காண வேண்டும்: அப்துல் கலாம்
UPDATED : பிப் 15, 2015 12:00 AM
ADDED : பிப் 15, 2015 12:40 PM
மதுரை: "உயர்ந்த லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு, விடா முயற்சியுடன் அதை அடையவேண்டும் என்ற உறங்க விடாத கனவுகளை மாணவர்கள் காண வேண்டும்" என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை வழங்கினார்.
மதுரை வீரபாஞ்சான் டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் நடந்த கலந்துரையாடலில் மாணவர்களிடம் அவர் பேசியதாவது: பள்ளிப் படிப்பை முடித்து மாணவர்கள் வெளியே செல்லும்போது அறிவை கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு அழிவு வராமல் காக்கும் கருவி அறிவு. எத்தகைய சூழ்நிலையிலும் பகைவராலும் அறிவை அழிக்க முடியாது என்றார் வள்ளுவர்.
இதுநாள் வரை என்னுடைய உற்ற துணையாக, வாழ்வில் நண்பனாக திருக்குறளை தான் வைத்துள்ளேன். இளைஞர் வளம் நிறைந்தது நம் நாடு. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் லட்சியம், அறிவை தேடுதல், விடா முயற்சியை பெற்றிருக்க வேண்டும்.
கற்பனை சக்தி, மனத் துாய்மை மற்றும் உறுதியான உள்ளம் என்பன அறிவுக்கு இலக்கணம். கற்பனை சக்தி கற்றலை உருவாக்கும். கற்றல் சிந்தனையை அதிகரிக்கும். சிந்தனை அறிவை வளர்க்கும். அறிவு நம்மை மகான் ஆக்கும்.
இளைஞர்கள் வாழ்வில் வெற்றிபெற மிகப் பெரிய லட்சியம், அறிவை தேடுதல், விடா முயற்சி கொண்டிருக்க வேண்டும். உங்களை உறங்கவிடாத கனவுகள் காணவேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களால் மாணவர்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.
டி.வி.எஸ்., பள்ளிகிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
கலாமிடம் 3 கேள்விகள்
கேள்வி: உங்கள் எண்ணத்தில் தோன்றிய 2020 அடைய மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
கலாம்: லட்சியத்துடன் நன்றாக படிக்க வேண்டும்.
கேள்வி: ஆசிரியர், விஞ்ஞானி, அணுகுண்டு தொழில்நுட்பம், ஜனாதிபதி இவற்றில் எப்பணியை அதிகம் நேசித்தீர்கள்?
கலாம்: எனக்கு பிடித்தது ஆசிரியர் பணி.
கேள்வி: மாணவர்களிடம் எதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்?
கலாம்: உயர்ந்த லட்சியத்தோடு குறிக்கோள்களை அடைய கடின உழைப்புடன் தனித்திறமைகளை கொண்டவர்களாக விளங்க வேண்டும்.
