"ஒவ்வொரு மாணவரும் விளையாட்டில் சிறந்து விளங்க பெற்றோர் ஒத்துழைப்பு தேவை"
"ஒவ்வொரு மாணவரும் விளையாட்டில் சிறந்து விளங்க பெற்றோர் ஒத்துழைப்பு தேவை"
UPDATED : பிப் 16, 2015 12:00 AM
ADDED : பிப் 16, 2015 12:25 PM
கோவை: ஒவ்வொரு மாணவரும், ஏதாவதொரு விளையாட்டில் சிறந்து விளங்க பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம் என, மல்யுத்த பயிற்சியாளர் பிரபு கூறுகிறார்.
நாட்டின் வீரமிக்க கலைகளில் ஒன்றான மல்யுத்தம், சிலம்பம் குறித்த ஆர்வத்தை மாணவர்களின் மத்தியில் ஏற்படுத்தி வரும், பிரபு, 27, கணபதியில் வசித்து வருகிறார். பள்ளி பருவத்தில், மாவட்ட, மாநில, சர்வதேச அளவிலான மல்யுத்தம் மற்றும் சிலம்பம் போட்டியில் பங்கேற்று தங்கம், வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
2005ம் ஆண்டு, கோவை மாவட்டத்தில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கேற்று, இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 2013ம் ஆண்டு, பாரதியார் பல்கலையில், பி.பிஎட்., படித்து இளங்கலை பட்டம் பெற்றார். இடைப்பட்ட காலத்திலும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு, சாய்பாபாகாலனி, லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி இயக்குனராக பணியில் சேர்ந்து, பல்வேறு மாணவர்களுக்கு, தாம் கற்ற வீர கலையை குறித்த பயிற்சியை அளித்து வருகிறார். மாவட்ட அளவில் நடக்கும் மல்யுத்தம் போட்டிக்கு, நடுவராக பணிபுரிந்துள்ளார்.
கடந்தாண்டு ஜார்கண்ட், உ.பி.,யில் நடந்த அகில இந்திய போட்டியில் தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மேலும், காந்திமாநகர், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வாரம் இரண்டு முறை இலவச மல்யுத்த வகுப்பு நடத்தி வருகிறார். இப்பயிற்சியின் மூலம், 5 மாணவிகள் கடந்தாண்டு காஷ்மீரில் நடந்த மல்யுத்தம் போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.
மல்யுத்தம் பயிற்சியாளர் பிரபு கூறுகையில், "ஒவ்வொரு மாணவரும், ஏதாவதொரு விளையாட்டில் சிறந்து விளங்க பெற்றோர் ஒத்துழைப்பு அவசியம். பள்ளி விளையாட்டு விழாவின்போது நடக்கும் போட்டிகளில், மல்யுத்தமும் இடம்பெற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், சிலம்பம், மல்யுத்தம் ஆகிய பாரம்பரிய போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க பள்ளி நிர்வாகம் முன்வர வேண்டும்" என்றார்.
