மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகும் ஆசிரியர் சங்கத்தினர்
மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகும் ஆசிரியர் சங்கத்தினர்
UPDATED : பிப் 18, 2015 12:00 AM
ADDED : பிப் 18, 2015 11:39 AM
கடந்த 2003ல், அரசு ஊழியர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட 32 ஆசிரியர் சங்கத்தினர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்து, பல கோரிக்கைகளுக்காக, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமாகி உள்ளனர்.
ஜாக்டோ கூட்டமைப்பு
முதற்கட்டமாக, அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை, நேற்று முன்தினம் துவக்கினர். இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்க, சேலம் மாவட்ட தலைவர் பாரி கூறியதாவது: பலவகை ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படும், 32 சங்கங்கள், 12 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் ஒருங்கிணைந்து, ஜாக்டோ கூட்டமைப்பு துவக்கி உள்ளனர். சேலம் மாவட்டத்தில், கடந்த 15ம் தேதி நடந்த கூட்டத்தில் 70 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வரும் 22ம் தேதி, சேலத்தில் போராட்டத்திற்கான ஆயத்த கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டமைப்புக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். அரசு, ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும்; 2004 - 06ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; அனைத்து ஆசிரியர்களுக்கும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற, ஜாக்டோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபடும்.
முதற்கட்டமாக, வரும் மார்ச் 8ம் தேதி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவோம். ஆர்ப்பாட்டங்களில், மாநிலம் முழுவதும், 32 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.
