காலவரையற்ற போராட்டமாக மாற்றினர் இ.எஸ்.ஐ. மருத்துவ மாணவர்கள்
காலவரையற்ற போராட்டமாக மாற்றினர் இ.எஸ்.ஐ. மருத்துவ மாணவர்கள்
UPDATED : பிப் 21, 2015 12:00 AM
ADDED : பிப் 21, 2015 12:33 PM
சென்னை: இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை மூடுவதன் முன்னோட்டமாக, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியலில் கல்லூரிகள் விடுபட்டுள்ளன. இதனால், இரண்டு நாட்களாக நடந்த போராட்டத்தை, காலவரையற்ற போராட்டமாக மாற்றி உள்ளனர்.
இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை நிர்வகிக்க முடியாமல் திணறும், இ.எஸ்.ஐ., தலைமையகம், கல்லூரிகளை மூடும் நிலைக்கு வந்துள்ளது. புதிய மாணவர் சேர்க்கை இல்லை என அறிவித்ததோடு, மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது.
இதனால், நாடு முழுவதும், இ.எஸ்.ஐ., மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இரண்டு நாட்களாக வகுப்புகளை புறக்கணித்தனர். மத்திய அரசு எந்த உத்தரவாதமும் அளிக்காததால், போராட்டத்தை, காலவரையற்ற போராட்டமாக மாற்றினர்.
மாணவி சவுந்தர்யா கூறுகையில், "இவ்வளவு பிரச்னை நடந்துவரும் நிலையில், மத்திய அரசு தன் முடிவில் உறுதியாக உள்ளது. அகில இந்திய நுழைவுத்தேர்வுக்கான, முதுநிலை மாணவர் சேர்க்கை கல்லூரிகள் பட்டியலில், இ.எஸ்.ஐ., கல்லூரிகள் பெயர் இல்லை. எனவேதான் எங்கள் போராட்டத்தை காலவரையற்ற போராட்டமாக மாற்றி உள்ளோம்" என்றார்.
