பி.எட். படிப்பை 2 ஆண்டுகள் நீட்டிக்கும் உத்தரவை நிறைவேற்ற கால அவகாசம் கேட்பு: தமிழக அரசு
பி.எட். படிப்பை 2 ஆண்டுகள் நீட்டிக்கும் உத்தரவை நிறைவேற்ற கால அவகாசம் கேட்பு: தமிழக அரசு
UPDATED : பிப் 24, 2015 12:00 AM
ADDED : பிப் 24, 2015 11:25 AM
சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்
மார்க்சிஸ்ட் டில்லி பாபு: பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஓராண்டு படிப்பு, இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: ஓராண்டாக உள்ள பி.எட்., படிப்பை, இரண்டாண்டுகளாக நீட்டித்து, தேசிய கல்வியியல் குழுமம் உத்தரவிட்டு, வரும் கல்வி ஆண்டான 2015 - 16 முதல், அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
திடீரென்று பி.எட்., படிப்பை, இரு ஆண்டுகளாக நீட்டித்தால், அதற்கேற்ப, கல்வியியல் கல்லூரிகளில், கட்டட வசதி, ஆசிரியர் நியமனம் ஆகியவற்றை செய்ய வேண்டும்.
எனவே, இந்த உத்தரவை, 2016 - 17 கல்வியாண்டு முதல் அமல்படுத்த, அவகாசம் அளிக்குமாறு, தேசிய கல்வியியல் குழுமத்துக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய கல்வியியல் குழுமத்தின் உத்தரவை எதிர்த்து, சுயநிதி பி.எட்., கல்லூரி நிர்வாகத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு, விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் எட்டப்படும் முடிவைப் பொறுத்தும், அடுத்த கட்ட நடவடிக்கையை, தமிழக அரசு எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.
