பிளஸ் 2 விடைத்தாள்கள் தீக்கிரையான சம்பவத்தில் முதன்மை கல்வி அதிகாரி மாற்றம்
பிளஸ் 2 விடைத்தாள்கள் தீக்கிரையான சம்பவத்தில் முதன்மை கல்வி அதிகாரி மாற்றம்
UPDATED : பிப் 25, 2015 12:00 AM
ADDED : பிப் 25, 2015 11:55 AM
திருநெல்வேலி: நெல்லையில் பிளஸ் 2 விடைத்தாள்கள் தீக்கிரையாயின. முதன்மை கல்வி அதிகாரி மாற்றப்பட்டார்.
தமிழகத்தில் பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 5ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் மாவட்டங்களில் பாதுகாக்கப்படுகின்றன. திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளியில் அதன் சுற்றுவட்டார ஏழு பள்ளிகளுக்குரிய விடைத்தாள்கள் பாதுகாக்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை இரவில் விடைத்தாள்கள் இருந்த அறையில் திடீர் தீப்பிடித்து 850 விடைத்தாள்கள் தீக்கிரையாயின.
பள்ளி தலைமையாசிரியர் ஷேக் முகம்மது புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே பள்ளியில் ஏற்கனவே கடந்த எட்டு மாதங்களுக்குமுன்பும் தீ விபத்து ஏற்பட்டது. தேர்வுப் பணிகளை முழுமையாக கண்காணிக்கும் பொறுப்பு மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளுக்கு உள்ளது. விடைத்தாள்கள் தீக்கிரையாகும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி(சிஇஓ) கஸ்தூரிபாய் நேற்றுமுன்தினம் மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு வேறு பணியிடம் வழங்கப்படவில்லை. நெல்லை முதன்மை கல்வி அதிகாரியாக விழுப்புரத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரியாக பணியாற்றிய சுவாமிநாதன் இங்கு நேற்று பொறுப்பேற்றார். திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் விழா நடத்தி, அதில் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்த புகாரில் ஜெயக்கண்ணு மாற்றப்பட்டார். அந்த இடத்தில் அண்மையில் கஸ்தூரிபாய் நியமிக்கப்பட்டார்.
