UPDATED : ஆக 24, 2015 12:00 AM
ADDED : ஆக 24, 2015 10:33 AM
உடுமலை
: பள்ளிகளில், ஆசிரியர்களால் பிரச்னை ஏற்படும் போக்கு, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது; இதை தடுக்க, ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாழ்க்கை முறையில் உள்ள ஏற்றத்தாழ்வு, கல்வியில் பின்தங்கி இருப்பது, குடும்பச்சூழல் போன்ற பல்வேறு காரணங்களால், மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதன் தாக்கம், தகாத செயல், வன்முறை போன்றவையாக வெளிப் படுகின்றன. இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்தவே, பள்ளி மாணவர்களுக்கு, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது. சில இடங்களில், மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களுக்கும், இதே நிலை இருப்பதை, சமீபத் தில் நடந்த சில சம்பவங்கள் உணர்த்துகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட சில இடங்களில், அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இடையே பிரச்னை நடந்துள்ளது. கோவை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், இதுபோன்ற இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் காலிப்பணியிடம் இருப்பதால், அவர்களுக்கான பணிகளையும், மற்ற ஆசிரியர்கள் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது. பணிச்சுமை கூடுவதுடன், மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தவிர, மாணவர்களை போலவே குடும்பச்சூழல் உள்ளிட்ட பிரச்னைகளால், ஆசிரியர்கள் சிலரும் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய ஆசிரியர்கள் சிலர், பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறுவது, மாணவர்களிடம் வெறுப்பை காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில், மாணவர்களிடையே நடக்கும் பிரச்னைகளை விடவும், ஆசிரியர் - தலைமையாசிரியர், ஆசிரியர் - நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர் - சக ஆசிரியர்களுக்கு இடையேயான பிரச்னைகளே அதிகமாக உள்ளன. குறிப்பாக, துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் அதிகளவில் உள்ளது.
இதுபோன்ற சூழலில், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனரே தவிர, நிரந்தரத் தீர்வு காணப்படுவதில்லை. கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும், எந்த நடவடிக்கையும் இல்லாதது, மற்ற ஆசிரியர்கள் இடையே வேதனையை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையால், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்; அவர்களின் கல்வி தரம் கேள்விக் குறியாகிறது என்பதை, கல்வித்துறை அதிகாரிகள் உணர வேண்டும்.
மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை, ஆசிரியர்கள் மனதில் விதைப்பதற்கு முன், அவர்களுக்கு ஏற்படும் மன ரீதியான பிரச்னைகளுக்கு, உளவியல் கவுன்சிலிங் வழங்குவது, அவசியம் என, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை மண்டல உளவியல் நிபுணர் அருள் வடிவு கூறும்போது, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பள்ளிகளில், ஆசிரியர்களுக்கும், மாணவர்களை கையாள்வது குறித்து அறிவுரை வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பிரத்யேகமாக உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து, எந்த உத்தரவும் இல்லை. கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
