UPDATED : செப் 03, 2015 12:00 AM
ADDED : செப் 03, 2015 11:03 AM
மதுரை
: உயிருக்கு இன்பம் தருவது படிப்பு, என மதுரை தமுக்கத்தில் நடக்கும் புத்தக
கண்காட்சியில் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தார்.
கண்காட்சியில் தினமலர் அரங்கில் வாசகர்களின் புத்தகங்களில் கையெழுத்திட்டு அவர் கூறியதாவது:
மனித இனத்தை பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்துவது கல்வி. கல்வி என்பது படித்து வாங்கிய பட்டமல்ல. புத்தகங்களை படிக்க தெரிய வேண்டும். மனிதர்களை ஞானிகளாக, தெய்வங்களாக மாற்றி, அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது தான் கல்வி. கவிஞர் கண்ணதாசனின் தாயார் தாலாட்டு பாடல்களை பாடுவதில் தேர்ந்தவர். பாபநாசம் சிவனின் தாயார் வீடு வீடாக சென்று நலுங்கு பாடல்கள் பாடுவதில் சிறந்தவர். அறிவை, அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைக்கும் சொத்து தான் கல்வி. படிப்பு என்பது சம்பாத்தியத்திற்காக அல்ல. வயோதிகத்தின் போது கவிதை புத்தகம் துணையிருந்தால் உங்களை வழிநடத்தும்.
நீங்கள் எதை படிக்கிறீர்களோ அதற்கேற்ற சூழலை மாற்றி காட்டும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. உயிருக்கு இன்பம் தருவது படிப்பு. கல்வியாளர்களோ, எழுத்தாளர்களோ இந்த உலகை விட்டு மறையும் போது, அவர்கள் இடத்தை நிரப்ப ஆளில்லை என்று வருத்தப்படுவதுண்டு. வேறு யாருக்கும் அத்தகைய வார்த்தை பொருந்தாது, என்றார்.
