அறியாமை இருளை அகற்றி அறிவுச்சுடர் ஏற்றும் ஆசிரியர்
அறியாமை இருளை அகற்றி அறிவுச்சுடர் ஏற்றும் ஆசிரியர்
UPDATED : செப் 05, 2015 12:00 AM
ADDED : செப் 05, 2015 10:31 AM
சமீபத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், வாழ்நாள் முழுவதும், ஆசிரியர்களை நினைவு கூர்ந்தபடியே இருந்தார். அவர் பங்கேற்ற கூட்டங்களில், ஆசிரியர்களின் புகழ் பாடினார். தனது உயர்வுக்கு ஆசிரியர்களே முக்கிய காரணம் என்பதை வெளிப்படுத்தினார். அணு விஞ்ஞானியாக, நாட்டின் ஜனாதிபதியாக இருந்ததை காட்டிலும், ஆசிரியராக இருப்பதே, தன்னை மகிழ்ச்சிபடுத்தியதாக, அடிக்கடி குறிப்பிட்டு இருக்கிறார்.
வகுப்பறையில் அமர்ந்திருப்பது குழந்தைகள் அல்ல; எதிர்கால இந்தியா என்பதை உணரும் ஆசிரியர்கள், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை சிந்தனையை தருகின்றனர். புத்தக அறிவு மட்டுமின்றி, வாழ்க்கை கல்வியும் கற்றுத்தருகின்றனர். நல்ல மாணவன் கிடைப்பது ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதுபோல், நல்ல ஆசிரியர் கிடைப்பது, மாணவனுக்கு வரப்பிரசாதம். மாணவனுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை, ஆர்வத்தை வெளிக்கொணரும் நுட்பம், ஆசிரியருக்கு தெரிந்திருக்க வேண்டும்; மாணவர்களின் மனநிலையை புரிந்து கொண்டால் மட்டுமே, சிறந்த ஆசா னாக இருக்க முடியும்.
இன்றைய சமுதாய சூழலில், மனித மனங்களை முடமாக்கும், கலாசார சீரழிவுகள் அதிகரித்துள்ளன; பிஞ்சு மனதில் நஞ்சு விதைக்கும் மோசமான பழக்க வழக்கங்கள் மிகுந்து விட்டன. தவறுகளை சரியென நியாயப்படுத்தும் கலாசாரம், வெகுவேகமாக பரவி வருகிறது. இதையெல்லாம் கடந்து, மாணவர்களை நல்வழிப்படுத்தி, நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தர வேண்டிய கூடுதல் பொறுப்பு, இன்றைய ஆசிரியர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதை ஆசிரியர்கள் உணர்ந்து, கடமையாற்ற வேண்டும். அறியாமை இருளில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்டு, அறிவுச்சுடர் ஏற்றி, அவர்களது எதிர்காலத்தை பிரகாசமாக்க வேண்டிய கடமை, ஆசிரியர்களிடம் உள்ளது. அதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர, ஆசிரியர் தினமான இன்று, சபதம் ஏற்க வேண்டும்.
ஆலயமும்
ஆசிரியரும்!
அவிநாசி சாந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், ஆசிரியர் தினம், நேற்று கொண்டாடப்பட்டது. தாளாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஷாகுல் ஹமீது வரவேற்றார். பூண்டி ரோட் டரி பட்டய தலைவர் முருகானந்தன், எதிர்கால இந்தியா என்ற தலைப்பிலும்; அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவி தலைமையாசிரியர் அன்பு சிசு மணியன், ஆலயமும் ஆசிரியரும் என்ற தலைப்பிலும், சிறப்புரை ஆற்றினர். ஆசிரியர்களிடம், பள்ளி மாணவ, மாணவியர் ஆசிபெற்றனர். ஆசிரியை ரேணுகாதேவி நன்றி கூறினார்.
