கல்லூரிகளில் உபகரணம் இல்லை; பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள் ரத்து
கல்லூரிகளில் உபகரணம் இல்லை; பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள் ரத்து
UPDATED : செப் 22, 2015 12:00 AM
ADDED : செப் 22, 2015 10:36 AM
கோவை
: போதிய உபகரணம் இல்லாததால், கோவை மண்டலத்தில், மூன்று கல்லுாரிகளின் செய்முறை தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் என, 521 பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இக்கல்லுாரிகளின் செய்முறை தேர்வுகள், 25ல் துவங்கி அக்.,10 வரை நடக்கின்றன. தேர்வு நேரத்தில் பறக்கும் படையினர் ஆய்வு செய்து உபகரணங்கள், ஆய்வக வசதி இல்லாத கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கம். இறுதி நேர ஆய்வுகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, கல்வியாண்டின் துவக்கத்திலேயே தீவிர கண்காணிப்பில் ஈடுபட தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவுசெய்தது.
அதன்படி, கோவை மண்டலத்திலுள்ள,62 கல்லுாரிகளில், 24 பறக்கும் படையினர், ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதுவரையிலான ஆய்வில், போதிய உபகரணம் இல்லாத மூன்று கல்லுாரிகளின் செய்முறை
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆய்வுப்பணி இன்றுடன் முடிக்கப்பட்டு, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு அறிக்கை
அனுப்பப்படவுள்ளது. பறக்கும் படை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆய்வில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், தலா ஒரு கல்லுாரி என, மூன்று கல்லுாரிகளில் போதிய உபகரணம் இல்லாதது
தெரியவந்துள்ளது. இக்கல்லுாரிகளில்,
100 மாணவர்களுக்கு, இரண்டு
அல்லது மூன்று செய்முறை உபகரணங்கள் மட்டுமே உள்ளன.
எனவே, மூன்று கல்லுாரிகளிலும் தேர்வு நடக்காது. ஒரு மாத
காலத்துக்குள் போதிய உபகரண வசதிகளை ஏற்படுத்த, கல்லுாரிகளுக்கு அவகாசம் வழங்கப்படும். மீண்டும்
ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிய பின்னரே, தேர்வு நடத்த அனுமதிக்கப்படும். இவ்வாறு, உயர் அதிகாரி கூறினார்.
