UPDATED : டிச 20, 2015 12:00 AM
ADDED : டிச 20, 2015 11:13 AM
சென்னை பல்கலையில், மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வர, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை பல்கலை வளாகத்தில்,
15ம் தேதி நடந்த இயற்கை
பேரிடர் குறித்த கருத்தரங்கில், இலங்கை தமிழ் மாணவர் ஒருவர் கேள்வி கேட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மாணவரை
பல்கலை ஊழியர்கள் வெளியேற்றினர்.
மாணவனை தாக்கியதாக கூறி, அவருக்கு ஆதரவாக அரசியல் அறிவியல் துறை மாணவர்களும், வெளி கல்லுாரி மாணவர்கள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவரல்லாத சிலரும் கலந்து கொண்டதாக, பல்கலைக்கு தகவல்
கிடைத்தது. இதுகுறித்து, போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், மாணவர் என்ற பெயரில், பல்கலை வளாகத்தில் சிலர் சுற்றி திரிவதும், குழுக்களாக கூட்டம் போடுவதும் தெரிய வந்துள்ளது.
மாணவர்கள் அரை டிரவுசர் அணிந்து நடமாடுவதால், வெளியாட்களும், அரை டிரவுசரில் உள்ளே வர வாய்ப்பு உள்ளது என, பல்கலை நிர்வாகத்தை, போலீசார் எச்சரித்தனர். இரு மாதங்களுக்கு முன், இந்திய - ஜப்பான் மாணவ, மாணவியர் கலாசார நிகழ்ச்சிக்கு, மாணவரல்லாத சிலர் வந்ததால், கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வர, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பல்கலையின் செனட் மற்றும் சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்க, அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
