UPDATED : டிச 28, 2015 12:00 AM
ADDED : டிச 28, 2015 10:21 AM
மதுரை
: மதுரை
மாவட்டத்தில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஏ.இ.ஓ.,) ஊழியர்கள் பற்றாக்குறையால் மாற்றுப்பணிக்கு ஆசிரியர்கள் செல்ல
வற்புறுத்தப்படுகின்றனர். இதனால் கல்விப் பணிகள் பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் தொடக்கக் கல்வியை கண்காணிக்க 15 ஏ.இ.ஓ., அலுவலகங்கள் உள்ளன. இதில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர், இளநிலை உதவியாளர்கள், டைப்பிஸ்ட் போன்ற பணியிடங்கள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.
டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர்கள் இல்லாததால் அலுவலகங்களில் அவர்களின் பணியை, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ள பள்ளிகளை அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். இதற்கு பணிந்து, தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கல்வித்துறையில் பல ஆண்டுகளாக அமைச்சுப் பணியாளர்கள் நியமனம் இல்லை. உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க அனுமதிப்பது ஏ.இ.ஓ.,க்கள் தான். ஒவ்வொரு ஏ.இ.ஓ.,க்களின் கட்டுப்பாட்டிலும் குறைந்தபட்சம் 500 ஆசிரியர்கள் உள்ளனர்.
ஊழியர் பற்றாக்குறையால் சம்பள பில் தயாரிப்பது, பில் தொடர்பான கருவூலப் பணிகள், பணிப்பதிவேடு பராமரிப்பு, நலத்திட்டங்கள் கண்காணிப்பு போன்ற பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதை சமாளிக்க அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துகின்றனர். இதனால் கல்விப்பணி பாதிக்கிறது. சிலர் இப்பணியை காரணம் காட்டி வேலை செய்யாமல் இருக்கின்றனர். அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், என்றனர்.
