UPDATED : டிச 31, 2015 12:00 AM
ADDED : டிச 31, 2015 10:56 AM
சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நேற்று, தினமலர் சார்பில், பிளஸ் 2 படிக்கும், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கான, ஜெயித்துக் காட்டு வோம் நிகழ்ச்சி நடந்தது. சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில், சென்ற ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியருக்கு, தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, பரிசுகள் வழங்கி பேசியதாவது:
இந்நிகழ்ச்சி
நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் இருந்தது.
உங்கள் ஆர்வத்தாலும், என் அன்பாலும், இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி
என, சிறந்த ஆசிரியர்கள் உங்களுக்கு
விளக்குகின்றனர். அவர்கள் கூறியதை குறிப்பு எடுத்து, வீட்டிற்கு சென்றதும், தனி காகிதத்தில்
எழுதி வைத்து, நன்றாக படிக்க வேண்டும்.
இதன் மூலம், நீங்கள், 10 முதல், 15 மதிப்பெண் கூடுதலாக பெறலாம்; இவை, உங்கள் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்தலாம். மருத்துவப் படிப்பில் சேர, ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம். தேர்வில் நீங்கள் பெறும், ஒவ்வொரு மதிப்பெண்ணும், உங்கள் வாழ்வில் மாறுதலை ஏற்படுத்தும். எனவே, அனைவரும் நன்றாக படியுங்கள்; வெற்றி பெறுங்கள். இவ்வாறு, தினமலர் ஆசிரியர் அறிவுரை வழங்கினார்.
சாதனை மாணவியருக்கு பரிசு
சென்ற ஆண்டு
தேர்வில், மாநகராட்சி பள்ளிகள் அளவில்,
1,169 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற, சைதாப்பேட்டை பள்ளி மாணவி, எஸ்.சவுமியா;
1,156 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்ற, பெரம்பூர் மார்க்கெட் தெரு பள்ளி மாணவி ஜி.சர்மிளா; 1,155 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பெற்ற சைதாப்பேட்டை பள்ளி மாணவி
கே.திவ்யா மூவரும் மேடையில் ஏற்றப்பட்டனர்.
மூவருக்கும்,
தினமலர் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ண மூர்த்தி, டி.வி.ஆர்., உருவம் பொறித்த நினைவு பரிசு; முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, 2020 நுால்களையும் வழங்கி பாராட்டினார்.
முதல் இடம்
பெற்ற, சவுமியா பேசுகையில், கடந்த பொதுத்தேர்வுக்கு, மூன்று
மாதங்களுக்கு முன், என் தந்தை இறந்து விட்டார். அதனால்,
மிகவும் சோர்ந்து விட்டேன். நீ நன்றாக படித்து,
முதல் மதிப்பெண் பெற்றால் தான், அப்பாவின் கனவு நிறைவேறும் என, ஆசிரியர்களும், தோழியரும் மிகுந்த உற்சாகம் ஊட்டினர்.
அதனால் தான், என்னால் முதல் மதிப்பெண் பெற
முடிந்தது. தற்போது, சி.ஏ., படித்து வருகிறேன், என்றார்.
இரண்டாம் இடம் பெற்ற, சர்மிளா பேசுகையில், எனக்கு, என் பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்கம் அளித்தபடி, அனைத்து உதவிகளும் செய்தனர். என்னைப் பொறுத்தவரை, அன்றைய பாடத்தை அன்றைக்கே முடித்து விடுவேன். இது, தேர்வில் வெற்றி பெற எளிதாக அமைந்தது. தற்போது, சி.ஏ., படித்து வருகிறேன், என்றார்.
