UPDATED : ஜன 02, 2016 12:00 AM
ADDED : ஜன 02, 2016 11:36 AM
சேலம்
:
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு
நடத்தப்படும் கற்றல் அடைவு திறன் தேர்வு, பெயரளவுக்கு நடத்தப்படுவதால், உண்மையான நிலை
வெளிவருவதில்லை என, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் அனைவருக்கும்
கல்வி திட்டத்தின் கீழ், கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு செயல்திட்டங்கள்
அமல்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, மாணவர்களின் கற்றல் அடைவு எந்த
அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை கண்டறிய, மாநில அளவில் கற்றல் அடைவு தேர்வு
நடத்தப்படுகிறது. ரேண்டம் வரிசையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு மூன்று, ஐந்து மற்றும்
எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு, இத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், ஜனவரி 5, 6 தேதிகளில்
மூன்று, ஐந்தாம் வகுப்புக்கும், ஜனவரி 7, 8 தேதிகளில், எட்டாம்
வகுப்புக்கும் கற்றல் அடைவு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் ஆசிரியர்
பயிற்றுனர் உதவியுடன், தலைமை ஆசிரியர்கள் தில்லுமுல்லு செய்வதால், மாணவர்களின்
உண்மையான கற்றல் திறன் வெளிப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
தொடக்கக்கல்வித்துறையில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எழுத படிக்க தெரிவதில்லை. ஆல்பாஸ் என்பதாலும், பொதுத்தேர்வுகள் இல்லையென்பதாலும், ஆசிரியர்களும் கண்டுகொள்வதில்லை. இவர்கள் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கு வந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்போது, தேர்ச்சி பெற வைக்க கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கற்றல் அடைவு திறன் தேர்வுகளில், ஆண்டுக்காண்டு வளர்ச்சி இருப்பதை போன்ற தோற்றத்தை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். குறையும் பட்சத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு டோஸ் விழும் என்பதால், அதற்கேற்ப ஒரு சில தலைமை ஆசிரியர்கள் தில்லுமுல்லு வேலைகளில் இறங்கிவிடுகின்றனர்.
பெயரளவுக்கு தேர்வு நடத்தி, விடைத்தாள்களை, ஆசிரியர்களே
நிரப்புகின்றனர். அல்லது மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவுகின்றனர். இதனால், கற்றல் அடைவு
தேர்வில், மாணவர்கள் முழு திறனுடன் வெளிவருவதாக போலித்தோற்றத்தை உருவாக்கிவிடுகின்றனர்.
எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வாக நடத்தினால் மட்டுமே, உண்மையான கற்றல்
அடைவு திறன் வெளிப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
