UPDATED : ஜன 04, 2016 12:00 AM
ADDED : ஜன 04, 2016 10:28 AM
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் பல முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் உள்ளதாக, யு.ஜி.சி.,க்கு புகார்கள் வந்ததால், உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன், யு.ஜி.சி., ஆய்வு நடத்தியது. புகார்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், அனைத்து கல்லுாரிகளும், வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை, ஆன்லைன் முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என, யு.ஜி.சி., தலைவர் வேத்பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழகத்தில், ஆன்லைன் சேர்க்கை முறையை அமல்படுத்த முடியாத வகையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர்கள் சிலர்
கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கலை கல்லுாரிகளில், ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள்
இல்லை. மாணவர் சேர்க்கையில் உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் உள்ளது; அதை எதிர்த்து கல்லுாரி முதல்வர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
முந்தைய கல்வி ஆண்டில், கல்லுாரிகளில் பாடப்பிரிவு வாரியாக மாணவர்களின் கட்டண விவரங்களை, அந்தந்த கல்லுாரி இணையதளங்களில் தெரியப்படுத்த, யு.ஜி.சி., உத்தரவிட்டது. உயர் கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து, சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் இதுவரை அமல்படுத்த முடியவில்லை. கல்வி கட்டணத்தையே வெளியிட முடியாத நிலையில், தற்போது ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினார்.
