போலி கல்வி சான்றிதழ்; 2 பேர் சஸ்பண்ட் 8 சிரியர்கள் தலைமறைவு!
போலி கல்வி சான்றிதழ்; 2 பேர் சஸ்பண்ட் 8 சிரியர்கள் தலைமறைவு!
UPDATED : ஜன 07, 2016 12:00 AM
ADDED : ஜன 07, 2016 10:51 AM
வேலூர்
: போலி
கல்விச் சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணியில் சேர்ந்த, இரண்டு பேர் சஸ்பண்ட் செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்தவர் முனியப்பன், 37. பிளஸ் 2 வரை படித்துள்ள இவர், துரைராஜ் என்ற பெயரில் போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து, வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் எர்ரம்பட்டி துவக்கப் பள்ளியில், ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவரின் சான்றிதழ்களை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சிவானந்தம் ஆய்வு செய்தார். அதில் அனைத்து சான்றிதழ்களும் போலி என்பது தெரிந்தது. தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, முனியப்பன், அவருக்கு போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்த ராஜேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவரிடம் விசாரணை செய்து, போலி சான்றிதழ் மூலம், வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றி அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்த, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த செந்தில்குமாரையும் கைது செய்தனர்.
கைதான முனியப்பன், செந்தில்குமார் ஆகிய இருவரையும், வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சிவானந்தம் நேற்று சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில், புரோக்கர் ராஜேந்திரன் மூலம் போலி கல்வி சான்றிதழ் பெற்ற, தர்மபுரி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த, 8 பேர், தற்போது வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில், அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வரும் தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
இவர்களுக்கு இதுவரை, 60 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. பலர் அரசு கடன் பெற்றுள்ளனர். இதில், நான்கு பெண் ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களிடம் விசாரணை செய்ய அதிகாரிகள் சென்ற போது, அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். போலி சான்றிதழ் விவகாரம் சூடு பிடித்துள்ளதால் பல ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
