UPDATED : ஜன 07, 2016 12:00 AM
ADDED : ஜன 07, 2016 10:58 AM
கோவை:
பல ஆயிரம்
இளைஞர், இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பை
ஏற்படுத்தித் தருவதற்காக, கோவையில் ஜன.,10ல் நடக்கவுள்ள வேலை வாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக
நடந்து வருகின்றன.
படித்த இளையோர்க்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் பொருட்டு, தமிழக அரசின் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, கோவை மாவட்டத்தில், ஜன.,10ல், கோவை ஸ்ரீகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பதிவு முகாம் நடக்கவுள்ளது.
தமிழக அரசின் வேலை வாய்ப்புத் துறை மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தவுள்ள இந்த முகாம் ஏற்பாடுகள், ஒரு மாதத்துக்கு முன்பே துவங்கி விட்டன. மாவட்டம் முழுவதும், இதற்காக நுாற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள், சுவர் மற்றும் விளக்கு விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
முகாமில் பங்கேற்க வருவோருக்கு, மதிய உணவு, குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமுக்கு வருவோரை, காந்திபுரம் மற்றும் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பஸ்கள், கல்வி நிறுவன வாகனங்களில் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி, ஐந்தாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கும், அவரவர் தகுதிக்கேற்ப வேலையை ஏற்படுத்தித் தருவதே, இந்த முகாமின் நோக்கமென்று, வேலை வாய்ப்புத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
பன்னாட்டு நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் உட்பட சாதாரண தொழிற்கூடங்கள் வரை, ஒவ்வொரு நிர்வாகமும் அந்தந்த நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வணிகத் திறனுக்கேற்ப, வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ளவர்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பல வாரங்களாக நடந்து வரும் இந்த முகாம் ஏற்பாடு குறித்து, அரசியல்ரீதியாகவும் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாம்களை விட, இது வெற்றிகரமான முகாமாக இருக்குமென்பதே, பொதுவான எதிர்பார்ப்பாகவுள்ளது.
